கல்விக்கு கரம் கொடு சரித்திரத்தில் பெயரெடு
கார்த்திக் முருகன்
மேலாண்மை இயக்குநர்
Amogha Overseas Educational consultant
கோவை
கனவுகளை விதைக்கின்ற இரவு வேண்டும்
கற்பனையில் மதிக்கின்ற கவிதை வேண்டும்
வைகறையில் மதிக்கின்ற பழக்கம் வேண்டும்
வாழும் வையகத்தை நினைக்கின்ற நெஞ்சம் வேண்டும்…!
என்ற வரிகள் வாழும் கவிஞர் ஒருவரின் தன்னம்பிக்கை மிக்க தத்துவ வரிகளாகும். அந்த வகையில் தான் பெறாத கல்வியை தன் எதிர்கால சமுதாயத்திற்கு எப்படியேனும் கொடுத்து விட வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காக வாழ்ந்து வரும் உன்னத மனிதர்.
வாழ்க்கையில் ஒருமுறை ஒவ்வொருவரும் அவமானம் பட வேண்டும், அந்த அவமானமே நாளை உன்னை அதிகார அரியானையில் ஏற்றும் என்பதே இவரின் உன்னத வாக்கு.
ஏழ்மையாய் பிறப்பது உன் தவறல்ல, ஆனால் ஏழ்மையாய் இறப்பது உன் தவறே என்பதை இதயத் துடிப்பாய் எண்ணி ஒவ்வொரு கணமும் ஓடோடி இயந்திரமாய் இயங்கிக் கொண்டிருக்கும் Amogha Overseas Educational consultant நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கார்த்திக் முருகன் அவர்களின் வெற்றியின் பகிர்வோடு இனி நாம்.
கே: உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?
நான் பிறந்தது புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள ஆலங்குடி என்னும் குக்கிராமத்தில் மின்சார விளக்கே இல்லாத ஓலை குடிசை வீட்டில் தான் பிறந்தேன். என் தந்தையார் முருகன், தாயார் கங்கா விவசாயப் பின்னணி உடைய குடும்பம். எனக்கொரு தம்பி சதிஸ். என்னுடைய மனைவி சுபாஷினி, மகள் அமோகா. மிகவும் வறுமையான குடும்பம், மதிய உணவிற்காகவே பள்ளிக்குச் சென்ற காலம் அது. இன்று நினைத்தாலும் என் புத்தகப் பையில் அதிகம் புரண்ட என் சாப்பாட்டுத் தட்டு தான் நினைவிருக்கிறது. எங்கள் ஊரிலுள்ள அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரைப் படித்தேன். வறுமையும் பசியும் எனக்குக் கற்றுக் கொடுத்தப் பாடம் என்னவென்றால் நன்றாகப் படிக்க வேண்டும் என்பது தான். அதன்படி பத்தாம் வகுப்புத் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்தேன்.
இதைப் பார்த்த என் மாமா திரு. கண்ணன் அவர்கள் இவனுக்கு சரியான இடமும் சூழலும் இதுவல்ல என்று என்னை சென்னைக்கு அழைத்துச் சென்று விட்டார். இவரே என் முதல் குரு என்று சொன்னால், அது மிகையாது. இதனால் சென்னையிலுள்ள ஒரு புகழ் பெற்ற பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு சேர்ந்தேன். என் மாமாவின் வேண்டுகொள்ளுக்கிணங்க சேர்ந்து விட்டேன். ஆனால் தமிழ்வழிக் கல்வியிலேயே ஆரம்பத்திலிருந்து படித்து திடீரென்று ஆங்கில வழிக் கல்வி கற்கச் சென்றது என்னை கண்ணிருந்தும் குருடனாய் மாற்றியது. ஆரம்பத்தில் ஆங்கிலத்தைப் பார்த்து அதிர்ந்தேன். வாழ்க்கை இது தான் என்று தெரிந்த பின்னர் பயப்படுவதை விட்டுவிட்டு பழகிக் கொள்ள முனைந்தேன். அகராதி வைத்து ஆங்கிலத்தை கற்றுக் கொண்டேன். நேரத்தை ஆங்கிலத்திற்காக அதிகம் செலவழித்தேன். இதன் விளைவாக பனிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்ணுடன் தேர்ச்சிப்பெற்றேன். எனது பெற்றோர் மற்றும் என் மாமாவின் எதிர்பார்ப்பை நான் பூர்த்தி செய்தேன். இப்படித்தான் எனது பள்ளிக்கல்வி பல சவால்களுக்கு இடையே சென்றது.
கே: உங்களின் கல்லூரி வாழ்க்கைப் பற்றிச் சொல்லுங்கள்?
எனக்கு சின்ன வயதிலிருந்தே எம்.பி.ஏ படிக்க வேண்டும் என்ற தீராத ஆசை இருந்தது. அதற்கு ஏற்றார் போல் பனிரெண்டாம் வகுப்பில் வணிகவியல் மற்றும் கணக்குப் பதிவியல் பாடத்தில் நல்ல மதிப்பெண் எடுத்ததாலே சென்னையில் மிகவும் புகழ்பெற்ற குருநானக் கல்லூரியில் மெரிட்டில் சீட் கிடைத்தது. அச்சூழலில் இக்கல்லூரியில் பி. காம் படிப்பது ஒரு வரம் என்றே சொல்லலாம். அப்படிப்பட்ட கல்லூரியில் சேர்க்கை கட்டணம் செலுத்த என் தந்தையிடம் பணம் இல்லை. எப்படியோ புரட்டி சேர்க்கை கட்டணப் பணமான 2500 ரூபாய் செலுத்தினார். அப்போது நான் நினைத்தது என்னவென்றால் இனி என் வீட்டில் பணத்தை வாங்கி படிக்கக்கூடாது என்பதை ஒரு சபதமாக எடுத்துக் கொண்டேன் அதை இன்று வரை கடைப்பிடித்து வருகிறேன். இதனால் படிக்கும் போது பகுதி நேர வேலைக்குச் செல்லலாம் என்று நினைத்து பல கடை வாசலில் ஏறி இறங்கினேன்.
அப்போது சென்னையில் புட்வேல்டு என்ற உணவகத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை என்று ஒரு விளம்பரத்தைப் பார்த்து வேலை கேட்க சென்றேன். ஒரு நாள் இரு நாள் அல்ல பதினைந்து நாள் விடாமல் அந்தக் கடைக்கு வேலை கேட்டு சென்றேன். என்னுடைய இந்த முயற்சியைப் பார்த்து கடையின் மேலாளர் வேலைக் கொடுத்தார் அப்போது என்னுடைய சம்பளம் 700 ரூபாய். இது தான் என்னுடைய முதல் சம்பளம். ஆனால் இது மட்டும் எனக்கு போதுமானதாக இல்லை. இதனால் புரபெசனல் கொரியர், புரெவ்சிங் சென்டர், பிட்ஸா கார்னர் என எல்லா வேலைக்கும் இரவு பகல் பாராமல் உழைத்தேன். ஒரு நாளைக்கு 4 மணி நேர தூக்கம் தான் எனக்கு. 20 முதல் 25 கி.மீ வரை சைக்கிள் பயணம் செய்தேன். நானே சமைத்து சாப்பிட்டு வந்தேன். இப்படித்தான் என்னுடைய கல்லூரிப் பயணம் சென்றது.
கே: சென்னைக்குச் சென்ற பயண அனுபவங்கள் பற்றி?
சென்னைக்கு படிக்கச் செல்கிறேன் என்று என்னுடைய பெற்றோர்களிடம் சொன்னேன். எனது தாயார் மறுத்தார். ஆனால் என் தந்தையோ நீ சென்னை செல்வதாக இருந்தால் தாராளமாகச் செல், சென்னை ஒன்றும் சாதாரண ஊர் அல்ல பல சரித்திர நாயகர்களை உருவாக்கி இடம் என்று என்னை அனுப்பி வைத்தார். ஊரிலிருந்து புறப்பட்டேன், எங்கு தங்குவது, உறங்குவது போன்ற எத்தனையோ கேள்விகள் என்னைச் சுற்றி படமாய் ஓடிக்கொண்டிருந்தது. சென்னைக்கு இரண்டு முகங்கள் உண்டு. அது பகல் நேரத்தில் ஒரு விதமாகவும், இரவு நேரத்தில் ஒரு விதமாகவும் தென்படும். நண்பர்கள் நிறைய உதவினார்கள் அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், சண்முகம், அருண், திலீப், விஜய்பாபு, இளையராஜா அண்ணா, சதிஸ், சக்தி அண்ணா, கணேஷ், சிவா அண்ணன் அது மட்டுமின்றி எனது பள்ளிப் பருவ மற்றும் நான் பிறந்த ஊர் நண்பர்களான சதிஸ், ரியாஸ், பிரபு, சுரேந்தர், செந்தில் ஆகியோர் என்னால் என்றும் மறக்க முடியாத நண்பர்களாகும். அப்போது தான் என் நண்பனின் மாமா கணேஷ் அண்ணனின் அறிமுகத்தால் எஸ்.எஸ்.என் கல்லூரியில் எம். பி. ஏ படிக்கும் வாய்ப்பை பெற்றேன். அப்போது தான் திலிப் அவர்களின் முலமாக எனக்கு இந்தியன் வங்கியில் கல்வி லோன் வாங்கிக் கொடுத்து உதவினார். அவரின் உதவியால் எம்.பி.ஏ. முடித்தேன். படித்த கையோடு கேபஸ் இன்டர்யூ வந்தது. இதில் தேர்வாகி, வேலையும் கிடைத்தது. என் குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் ஓரே மகிழ்ச்சி, 11,500 சம்பளத்தில் வேலையில் சேர்ந்தேன். கல்லூரியில் எனக்கு ஊக்கமாக இருந்த நண்பர்கள் சுமித், லெட்சுமி, பிரகாஷ், கணேஷ், நந்தக்குமார், செந்தில், ஆனந்த் ஆகியோரை இத்தருணத்தில் நினைவுப்படுத்தியே ஆகவேண்டும்,
கே: அமோகா உதயமானது பற்றிச் சொல்லுங்கள்?
எனக்கு சின்ன வயதிலிருந்து வெளிநாடுகளில் சென்று பணியாற்ற வேண்டும் என்ற ஆசையும் கனவும் இருந்தது. அது என்னுடைய ஆசை மட்டுமல்ல என்னுடைய மாமாவின் ஆசையும் அது தான். அதனால் நான் அமெரிக்காவைத் தேர்ந்தெடுத்தேன். அதன் படி பாஸ்போர்ட் எடுத்து விட்டேன். விசா எடுக்கும் பொழுது உமக்கு 40 லட்சம் மதிப்பிலான சொத்து இருக்க வேண்டும் என்று கூறிவிட்டார்கள். அப்போது என்னுடைய ஆசை நிறை வேறவில்லை. ஆனால் நான் அதை எதிர்மறையாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனாலும் என்னுடைய கனவை மாற்றிக் கொள்ள விரும்பவில்லை.
அப்போது தான் திடீரென்று ஒரு அழைப்பு வந்தது. அப்போது ஜலந்தர் அண்ணன்
அவர்களின் அறிமுகம் கிடைத்தது. இவரை என்னுடைய தொழில் குரு. இவரின் மூலமாக சுவீடன் என்ற நாட்டில் இலவசக் கல்விக் கொடுத்து வருகிறார்கள். உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்கள் அங்கு சென்று படியுங்கள் என்று கூறினார். அதன் படி நானும் அங்கு சென்றேன். ஆனாலும் என்னால் அங்கு முழுமையாகப் படிக்க முடியவில்லை. இதற்காக நான் மிகவும் சிரமப்பட்டேன். இதை ஏன் நாம் எளிமைப்படுத்தி ஒரு சேவைத் தொழிலாகச் செய்யக்கூடாது என்ற எண்ணம் எனக்குள் எழுந்தது. அதற்கு நாம் முதலில் இத்துறை சார்ந்த கள ஆய்வு செய்ய வேண்டும் என்று எண்ணி 15 நாடுகளுக்கு பயணம் செய்தேன். எனக்கு உறுதுணையாக இருந்த திரு. ஜலந்தர் அண்ணன் இருந்தார்கள். அவரின் ஊக்கமே என்னை அடுத்தடுத்த எல்லா நாடுகளுக்கும் செல்ல தூண்டியது. இவரை போலவே சுபேர் அகமது சண்முகம் வெள்ளிங்கிரி ஆகியோர் என்னுடைய வளர்ச்சிக்கு உற்ற துணையாக இருந்தவர்கள்.
அப்போது தான் 2008 ஆம் ஆண்டு ஜெயா தொலைக்காட்சியில் படி மாற்றி படி என்ற ஒரு நிகழ்ச்சியில் நான் பங்கேற்பாளராகக் கலந்து கொண்டு எங்கள் அமோகா நிறுவனத்தைப் பற்றிச் சொன்னேன். அந்த வருடமே 350 க்கும் மேற்பட்ட மாணவர்களை நாங்கள் வெளிநாட்டிற்குப் படிக்க அனுப்பி வைத்தோம். நான் மட்டும் தனியாக ஆலோசனைக் கூறி 150 க்கும் மேற்பட்ட மாணவர்களை அனுப்பி வைத்தேன். அதன் பிறகு என் வளர்ச்சியைப் பாராட்டி அன்றைய புகழ் பெற்ற பல தொலைகாட்சிகள் என்னை நேர்காணல் எடுத்து ஒளிப்பரப்பு செய்தது.
கே: உங்கள் ஆலோசனை படி வெளிநாட்டிற்குச் சென்று படிக்கும் மாணவர்களுக்கு நீங்கள் அளிக்கும் சிறப்புத் திட்டங்கள் பற்றிச் சொல்லுங்கள்?
எங்களிடம் ஆலோசனைப் பெற்று வெளிநாடு செல்லும் மாணவர்களில் நிறைய பேர் நடுத்தர மற்றும் ஏழை மாணவர்கள் தான். அவர்களால் அதிகளவில் பணம் கொடுத்து இங்கு படிக்க முடியாத சூழலில் இருப்பார்கள். இப்படிப்பட்ட மாணவர்கள் எங்களை நம்பி வரும் பொழுது அவர்களை மிகவும் அக்கரையுடன் அவர்களுக்கு ஏற்ற நாட்டிற்கு அனுப்பி வைப்போம், வெறும் அனுப்பி வைப்பதோடு இல்லாமல் அவர்களுக்கு வேலை வாய்ப்பு வாங்கும் வரை அவர்களுடன் நாங்கள் இருப்போம். மாணவர்களை ஒரு நாட்டிற்கு அனுப்புவதற்கு முன்பே நான் அந்த நாட்டிற்குச் சென்று விடுவேன்.
அக்கல்லூரி சார்ந்த அத்துனை தகவல்களையும் திரட்டி விடுவேன். கலாச்சாரம் நன்றாக இருக்க வேண்டும், பகுதிநேர வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும், இடம், காலசூழல், ஆங்கிலம் மொழி போன்றவற்றை அறிந்த பின்னரே தான் நான் அந்த நாட்டிற்கு அனுப்பி வைப்பேன். இதுவரை நான் அனுப்பிய மாணவர்களில் ஒருவர் கூட கல்லூரியையும், நாட்டையும் குறை சொல்லிக் கேட்டதில்லை. இதுவரை 5,000 த்திற்கும் மேற்பட்ட மாணவர்களைப் படிக்க அனுப்பி வைத்துள்ளோம். என்னுடைய மாணவர்கள் இன்று உலக நாடுகளில் பல இடங்களில் மருத்துவராகவும், பொறியாளராகவும் பணியாற்றி வருகிறார்கள். இது தான் எங்களுக்கு மிகப் பெருமையாகும்.
கே: கோவைப் பகுதியைத் தேர்ந்தெடுத்தன் காரணம் பற்றிச் சொல்லுங்கள்?
2008 ஆம் ஆண்டு கோவைக்கு வந்தேன். நான் எந்த ஊருக்குச் செல்கிறேன் என்றாலும் அந்த ஊர் பற்றிய அத்துனை தகவல்களையும் திரட்டி விடுவேன். ஒரு ஆறு மாத காலம் ஹோட்டலில் தங்கி கோவை சுற்றியுள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், மாணவர்கள், பெற்றோர்கள் போன்றவற்றை நன்றாகத் தெரிந்து கொண்டேன். கல்விக்கு ஏற்ற சூழல் இங்கு அதிகளவில் இருப்பதாக உணர்ந்தேன்.
நான் இங்கே வரும் பொழுது கோவை மிகவும் குளிர்ச்சியாக இருந்தது. ஒருவர் ஒரு முறை கோவையில் வந்து தங்கி விட்டால் அவர்களால் இவ்வூரிலிருந்து அவ்வளவு எளிதாக சென்று விடமுடியாது, அந்த அளவிற்கு இவ்வூர் அனைவருக்கும் பிடித்து விடும். நானும் இப்படித்தான் இந்த ஊரைத் தேர்ந்தெடுத்தேன். அதன்படி இங்கு அமோகா நிறுவனம் உதயமாயின. இன்று நான் கோவையிலுள்ள பல பள்ளிகளுக்கு கல்வி ஆலோசனை சார்ந்த விழிப்புணர்வு கொடுத்து வருகிறேன். மக்கள் பேசும் மொழியில் மிகவும் மதிப்பிருக்கும், இது போன்ற எண்ண மாறுதல்கள் தான் என்னை இங்கே தொழில் தொடங்க காரணமாக இருந்தது.
கே: உங்களின் வளர்ச்சிக்கு ஊடகத் துறையின் எங்கு எந்தளவிற்கு இருக்கிறது?
சமூகத்தின் நான்கு பெரிய தூண்களில் ஒன்று தான் ஊடகம். இன்றைய காலக்கட்டத்தில் ஊடகத்தின் வளர்ச்சி மிக அதிகளவில் பெருகி இருக்கிறது. உலகத் தலைவர்கள் கூட ஊடகத்தை நம்பியே உறுதி மொழி எடுக்கிறார்கள். அந்த வகையில் என்னுடைய வளர்ச்சிக்கு ஊடகம் பெரும் அளவில் பங்கு வகித்திருக்கிறது. தமிழ்நாட்டில் ஒளிப்பரப்படும் பெரும்பாலான தொலைக்காட்சியில் என்றுடைய நேர்காணல் வந்திருக்கிறது.
அதிலும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் ஜெயாடிவி, சத்தியம் டிவி மாலை முரசு, மக்கள்டிவி,கலைஞர்டிவி,பாலிமர் டிவி, தந்திடிவி பொதிகை ஆகிய தொலைக்காட்சியில் என்னுடைய நேர்காணலை வெளியிட்டார்கள் இப்படி என்னுடைய வளர்ச்சிக்கு ஊடகம் பெரும் அளவில் துணைப்புரிந்து இருக்கிறது என்றால் அது மிகையல்ல.
கே: வெளிநாடுகளுக்குச் சென்று படிப்பதில் உள்ள நன்மைகளைப் பற்றிச் சொல்லுங்கள்?
ஒரு மாணவனுக்கு சின்ன வயதிலிருந்தே டாக்டராக வேண்டும் என்ற ஆர்வம் அவனுக்குள் இருக்கும். ஏதேனும் ஒரு சூழலில் அவனால் இந்தியாவில் படிக்க முடியாத நிலைக்கு சென்று விடலாம். இதனால் அம்மாணவனின் மனம் மிகவும் வேதனைக்குள்ளாகும், அப்படிப்பட்ட மாணர்கள் என்னிடம் ஆலோசனைக்கு வரும் பொழுது உன்னுடைய இலக்கு மருத்துவர் அது இங்கே படித்தால் என்ன அல்லது வெளிநாடுகளில் படித்தால் என்ன உன்னுடைய இலக்கில் எப்படியேனும் நீங்கள் சாதித்து விடலாம் என்று அவர்களுக்கு ஆலோசனை கூறுவேன். அதற்கு முதலில் அவனுக்கு ஆர்வம் இருக்க வேண்டும்.
வெளிநாட்டுக் கலாச்சாரம் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும். அவர்கள் அங்கு படிப்பதால் அங்குள்ள கலாச்சாரத்தை நன்கு கற்றுக்கொண்டு புரிந்து கொள்ள முடிகிறது.
இங்கு சுமாராக ஆங்கிலம் பேசும் பிள்ளைகள் வெளிநாடுகளுக்கு செல்வதன் மூலம் ஆங்கிலம் சரளமாகப் பேசுவதை விட இன்னும் பிற மொழிகளையும் அவர்களால் கற்றுக் கொள்ள முடிகிறது.
எதையும் புத்தகத்தின் மூலம் அவர்கள் பாடத்தை நடத்த மாட்டார்கள்., எல்லாமே ஆய்வுகள் மூலமாகத்தான் எதையும் சொல்லிக் கொடுப்பார்கள்.
தொழிற்நுட்பங்களை கற்றுக் கொடுக்கும் போது அதிலுள்ள நுணுக்கங்களைக் கற்றுக் கொடுப்பார்கள்.
கே: உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மறக்க முடியாத நிமிடங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?
என் வாழ்க்கை ஒரு போராட்டக்களம். வறுமையின் வாசனையை மூச்சுக் காற்றாய் சுவாசித்த காலம். தெருவிளக்கில் படித்த நீங்காத நினைவுகள், ஒரு வேளை உணவு கிடைக்காத என்று ஏக்கத்தில் தெருவில் தூங்கி காலம், உறவினர்களின் பொய் போலிதனம், பண்டிகை காலத்தில் வீட்டிற்குச் சென்றால் என் பெற்றோர் புது ஆடை மகன் வாங்கி வந்திருப்பானா என்று தவித்த அத்தருணம், நண்பர்களின் எதிர்பாராத உதவிகள், பகுதி நேர வேலையை முடித்த நடு இரவு நேர சைக்கிள் பயணம், காதலித்து மணந்த மனைவி, எங்கள் அன்பிற்கு கிடைத்த மகள், ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த என் மகன் மருத்துவராகி விட்டான் என்று என்னிடம் நன்றி சொல்லும் தாய் தந்தையர்கள் என்று எல்லாமே என் வாழ்க்கையில் என்றும் நீங்காத நிமிடங்கள் தான்.
கே: உங்களிடம் வரும் பெற்றோர் மற்றும் மாணவர்களின் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கிறது?
எல்லோருக்குள்ளும் ஒரு பெரிய எதிர்பார்ப்போடு தான் எங்களைச் சந்திக்க வருகிறார்கள். என்னுடைய மகன் ஒரு மருத்துவராக, பொறியாளராக ஆக வேண்டும் என்று ஆசையோடு வருகிறார்கள், என்னுடைய பிள்ளை நன்றாகப் படித்து எங்களை பிற்காலத்தில் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதே பெற்றோர்களின் அதிகப்படியான ஆசையாக இருக்கிறது, இதில் தவறு ஏதும் இல்லை. தாங்கள் பெற்ற பிள்ளைகளை அவ்வாறு எதிர்பார்ப்பது சரியான ஒன்று தான். இவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திச் செய்யும் கட்டாயத்தில் நாங்கள் இருக்கிறோம்.
என்னிடம் ஒரு முறை மாணவர்கள் வந்து விட்டால் அவர்களின் மனதில் நம்பிக்கை பிறந்து விடும். அவர்களின் வாழ்க்கைக்கான நல்வழியை காட்டி விடுவேன். இவ்வழியில் அவர்கள் பயணம் செய்தால் நிச்சியம் வெற்றி பெற முடியும் என்பதை புரிய வைத்து விடுவேன்.
பெற்றோர்களுக்கு ஒரு வித பயம் இருக்கத்தான் செய்யும், தன் மகனோ, மகளோ வெளிநாட்டிற்கு அனுப்புவது பற்றியான அத்துனை தகவல்களையும் முறையாக அவர்களிடம் சொல்லி புரிய வைக்க வேண்டும். நம்மை நம்பி வருபவர்களை ஒரு போதும் நம்பிக்கை இழக்கும் படி நடந்திடுதல் கூடாது.
கே: அமோகவின் தனிச்சிறப்புகள் பற்றிச் சொல்லுங்கள்?
சாதாரண விவசாயக் குடும்த்தில் பிறந்தவரும் மருத்துவர் ஆகலாம். இதை உண்மையாக்கும் விதத்தில் தான் 12 வருடங்களுக்காக இந்த சேவையை செய்து வருகிறோம்.
குறைந்த கட்டணத்தில் மாணவர்கள் விரும்பும் நாடுகளில் மருத்துவம், பொறியியல் படிக்கலாம்.
எங்களிடம் எம்.பி.பிஎ.ஸ், இன்ஜினியர், எம்.பி.ஏ எம். எஸ் ஆகிய படிப்புகள், வேலைவாய்ப்பு சார்ந்த தொழிற்படிப்புகள் ஆகிய துறைகளை நீங்கள் விரும்பும் நாட்டில் படிக்கலாம்.
நல்ல தரம் வாய்ந்த கல்லூரிகளான உக்ரைன், ஜமைக்கா, அர்மோனியா, சீனா,போலந்து, சிங்கப்பூர், பிரான்ஸ், சுவிடன் போன்ற நாடுகளில் படிக்கலாம்.
மாணவர்களுக்கு பாஸ்போர்டு எடுத்துக் கொடுப்பதிலிருந்து, விமான கட்டணம், சேர்க்கை, விசா, பேங்க் லோன் என எல்லா உதவிகளையும் செய்வதோடு அவர்களை நேரடியாக கல்லூரியில் விட்டு அங்கும் எல்லாம் உதவிகளையும் செய்த பின்னரே வருகிறோம்.
உலக நாடுகளில் எங்கெங்கு என்ன பல்கலைக்கழகங்கள் இருக்கிறது, அங்கு கலாச்சாரங்கள் எப்படி இருக்கிறது என்று எல்லா நாடுகளுக்கும் நான் நேரடியாகச் சென்று ஆய்வு செய்த பின்னரே அங்கு மாணவர்களை அனுப்பி வைக்கிறோம்.
பணத்தை நாங்கள் ஒரு போதும் முக்கியமானதாக நினைத்ததில்லை, அது நாங்கள் இதுவரை அனுப்பிய மாணவர்களுக்கு தெரியும்.
எந்த நாட்டிற்கு மாணவர்களை அனுப்புகிறோமோ நானும் அவர்களுடன் சென்று அவனுக்குத் தேவையான அத்துனை உதவிகளையும் செய்த பின்னரே நான் வருவேன்.
எங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் அனைவரையும் நான் பல வெளிநாட்டு கல்லூரிகளுக்கு அழைத்துச் சென்றிருக்கிறேன்.
ஒரு துறையை ஒரு மாணவன் தேர்ந்தெடுத்து படிக்கும் முன் அத்துறை சார்ந்த அத்துனை நன்மைகளையும் தீமைகளையும் சொல்லிய பின்னர் தான் அதில் பயில அனுமதிப்போம். அது மட்டுமின்றி எதிர்கால வாழ்க்கைக்கு இக்கல்வி எவ்வாறு துணைப்புரிகிறது என்பதையும் சொல்லி அவனுக்கு விழிப்புணர்வு கொடுப்போம்.
கே: வளரும் இளம் தலைமுறையினருக்கு நீங்கள் கூறும் ஆலோசனைகள்?
ஆலோசனை என்பதை விட அறிவுரை என்று கூறினால் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
மாணவர்களே உங்கள் எண்ணம் போல் வாழ்க்கையை வாழுங்கள். உங்கள் நோக்கத்தை வளர விடுங்கள், இங்கு எதுவும் சாத்தியம் என்று புரிந்து கொள்ளுங்கள், இங்கு நிறைய வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கிறது, அதைத் தேடி ஓடுங்கள்.
முடியாது என்பது உன்னுடைய முயற்சியில் மட்டும் தான் இருக்கிறது. அதை சரியாகப் பயன்படுத்தினால் வானத்தையும் எட்டலாம், கடலையும் கடக்கலாம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.
கே : உங்களின் எதிர்காலத்திட்டம் ?
திட்டங்கள் நிறைய இருக்கிறது. ஒரு ஆதரவற்றோர் இல்லத்தைத் தொடங்க வேண்டும்.
முழுக்க முழுக்க இலவசமாக ஆங்கில வழிக்கல்வி கொடுக்கும் கல்விக்கூடத்தை தொடங்க வேண்டும்.
கிராமப்புற ஏழை எளிய நடுத்தர மாணவர்கள் அதிகளவில் வெளிநாடுகளுக்குச் சென்று படிக்க உதவ வேண்டும்.
நேர்காணல்: விக்ரன் ஜெயராமன்
இந்த இதழை மேலும்
0 comments Posted in Cover Story