September, 2019 | தன்னம்பிக்கை

Home » 2019 » September

 
  • Categories


  • Archives


    Follow us on

    எதையும் விரும்பிச் செய் எதிர்காலத்தைப் பூர்த்தி செய்

    அருட்செல்வர். முனைவர்.  பா. இராஜாராம்

    முன்னாள் தலைவர்,தாவரவியல் துறை,

    பூ.சா.கோ கலைக்கல்லூரி

    முன்னாள் செயலாளர் SP. நரசிம்மலு நாயுடு நினைவு அறக்கட்டளை.

    விஞ்ஞான ஆராய்ச்சியாளர்

    கோவை.

    இவர் மிகச்சிறந்த ஆசிரியர்

    பார் போற்றும் கல்விமான்

    அறிவியலைத் தமிழ் படுத்திய ஞானி

    புகழ்பெற்ற இதழாசிரியர்

    பன்மொழிப் பேசும் பண்பாளர்

    அகிலம் போற்றும் ஆராய்ச்சியாளர்

    உலகத்தைச் சுற்றிய உன்னத மனிதர்

    பல சாதனையாளர்களை உருவாக்கிய சான்றாளர்

    இயற்கை விஞ்ஞானி…

    என பன்முக ஆளுமைக் கொண்ட பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரியின் முன்னாள் தாவரவியல் துறைத் தலைவர் முனைவர் பா. இராஜாராம் அவர்களின் நேர்முகம் இனி நம்மோடு.

    கே: உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?

    நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னுரில்  ஜீன் மாதம் 15 ஆம் தேதி 1931 ஆம் ஆண்டு பிறந்தேன். பெற்றோர் திரு. டி.என். பாலகிருஷ்ண நாயுடு, நவநீதம்மாள். என்னுடன் பிறந்தவர்கள் ஆறு சகோதர்கள், இரண்டு சகோதரிகள் ஆவர். அதே போல் எனக்கு ஐந்து மகன்கள், ஒரு மகள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பணிகளை செய்து கொண்டிருக்கிறார்கள். தற்போது எல்லாம் மூன்று வயதிலேயே குழந்தைகளை பள்ளியல் சேர்த்து விடுகிறார்கள். ஆனால் நான் ஆறு வயதில் தான் ஒன்றாம் வகுப்பிலே சேர்ந்தேன். நான் படித்த பள்ளி குன்னுரிலுள்ள சிஎஸ்ஐ பள்ளியில் 1936 ஆம் ஆண்டு சேர்ந்தேன். கிருத்துவப்பள்ளி என்பதால் ஒழுக்கமும், கல்வி போதிக்கும் முறையும் முற்றிலும் மாறுப்பட்டதாக இருக்கும். இங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் அன்றைய காலத்திலேயே நன்றாக கல்வி கற்றவர்களாக இருந்தார்கள். அதன் பின் மேல்நிலை வகுப்பு செயிண்ட் அந்தோணியார் பள்ளியில் படித்தேன். அப்போது தான் எழுத்தறிவு முறை முதன் முதலில் பள்ளிகளுக்கு அறிமுகம் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த பள்ளியில் படித்த பாடத்திட்டம் பிற்காலத்தில் பி.எஸ்சி படிக்கும் போது வந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

    பள்ளிப்படிப்பை முடித்தவுடன் 1947 ஆம் ஆண்டு கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் என்னுடைய கல்லூரிப் பயணம் இரண்டு ஆண்டுகள் தொடங்கியது. பின்னர் சென்னையிலுள்ள பிரசிடென்சி கல்லூரியில் தாவரவியல் துறையைத் தேர்ந்தெடுத்தப் படித்தேன். முனைவர் பட்டத்தை சென்னையிலிருந்து இங்கு எக்ஸ்டென்சன் சென்டர் ஒன்று இருந்தது அதில் எனது வழிகாட்டுதல் ஆசிரியர் முனைவர். சுந்தரராஜீலு அவர்கள் மூலமாக முனைவர் பட்டம் பெற்றேன்.

    கே: அறிவியல் துறையைத் தேர்ந்தெடுத்தன் காரணம் பற்றிச் சொல்லுங்கள்?

    1947 ஆம் ஆண்டுகளில் ஜெர்மனி, கீரிஸ், நார்வே, போன்ற நாடுகளில் அறிவியலின் வளர்ச்சி அப்போதே பெரிய அளவில் இருந்தது. ஆனால் இந்தியாவில் அப்போது தான் அறிவியல் வளர்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து கொண்டிருந்தது. அப்போது தான் இத்துறையைத் தேர்ந்தெடுத்து படித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

    மற்ற எல்லா துறைகளிலும் தகவல்கள் கிடைத்து விடும் ஆனால் அறிவியல் துறையில் நாம் தான் தகவல்களைத் திரட்ட வேண்டும். அறிவியல் இல்லாமல் இவ்வுலகம் இயங்காது என்பதை புரிந்து கொண்டேன்.  எல்லாவித பரிணாம வளர்ச்சிக்கும் அறிவியலே முதல் படி. இது போன்ற எண்ணற்ற காரணங்களால் தான் இத்துறையை படிக்க நேர்ந்தது.

    அப்போது இருந்த அறிவியல் ஆசிரியர்கள் வெறுமனே புத்தக பாடத்தை நடத்தாமல், நடத்தும் பாடத்திற்கு ஏற்றார் போல் நேரடியாக அந்த இடத்திற்கே கூட்டிச் சென்று செய்முறையாக பாடத்தை கற்பிப்பார்கள்.

    கே: உங்கள் முதல் ஆசிரியர் பயணம் பற்றிச் சொல்லுங்கள்?

    பிரசிடென்சி கல்லூரியில் எம். ஏ தாவரவியல் படிக்கும் போதே என்சிசி யில் சீனியர் கேடட்டாக இருந்தேன். அப்போது புதிதாக படிக்கும் மாணவர்களுக்கு இராணுவ பயிற்சி கற்பிக்க வேண்டும். இப்பயிற்சி முறை இராணுவம் சார்ந்த அத்துனை பயிற்சிகளும் கொடுக்க வேண்டும். பின்பு இது சார்ந்த நன்மைகள் என்ன, பயன்கள் என்ன, எதிர்கால தேவைகள் என்ன என்பதை அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்படும். இது அவர்களின் எதிர்கால வாழ்விற்கு பெரும் பயனாக இருக்கிறது.

    கற்பிக்கும் முறையில் இராணுவ முறைகளே சிறந்தது என அறிந்து கல்லூரி ஆசிரியர் பணியிலும் அந்த முறைகளையே பின்பற்றி என்னால் சிறந்த மாணவர்களை உருவாக்க முடிந்தது. ஜனவரி 26 ம் நாள் 1951 ஆம் ஆண்டு முதல் குடியரசு தின விழா தலைநகர் டில்லியில் கொண்டாடப்பட்டது. அப்போது இந்திய அரசிடமிருந்து ஒரு ஆணை வந்தது.  அது என்னவென்றால் தமிழ்நாடு, பம்பாய், கொல்கத்தா போன்ற மாநிலங்கள் ஒவ்வொன்றிலிலுருந்தும் 20 என்சிசி வீரர்கள் அனுப்பி வைக்கும் படி பாரத அரசு கேட்டுக்கொண்டது.  அதன்படி தமிழ்நாட்டிலிருந்து நானும் 20 பேர்களில் ஒருவனாக அனுப்பப்பட்டேன். டில்லியில் 15 நாட்கள் தீவிர பயிற்சி கொடுத்தார்கள். குடியரசுத் தலைவர் டாக்டர். இராஜேந்திரபிரசாத் அவர்களுக்கு சல்யூட் கொடுத்தோம். அது என் வாழ்நாளில் மறக்க முடியாத சிறந்த நிகழ்வாக இருக்கிறது.

    இராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும் ஆசிரியராக வர வேண்டும் என்பதில் தீராத காதல் இருந்தது. இதனால் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் வ. ஊ. சி அறக்கட்டளை சார்பாக தூத்துக்குடியில் ஒரு கல்லூரி நிறுவப்பட்டது. அங்கு முதன் முதலாக 1952 ல் பணியில் சேர்ந்தேன். அங்கு அப்போது திரு. சீனிவாச ராகவன் முதல்வராக இருந்தார்.  நான்கு ஆண்டு காலம் அங்கு பணியாற்றி, கோவையிலுள்ள பி.எஸ்.ஜி கலைக்கல்லூரியில் 1956 ஆம் ஆண்டு அப்போது புதிதாகத் தொடங்கிய பயலாஜி துறையில் பணியாற்ற தொடங்கினேன். இங்கு 39 ஆண்டு காலம் பணியாற்றினேன். என்னுடைய ஆசிரியர் பணியின் அனுபவம் மொத்தம் 43 ஆண்டுகள். இந்த ஆண்டுகளில் அறிவியல் துறைக்கும் சுற்றுச்சூழலுக்கும் நிறைய புதுமைகள் செய்து கொண்டு வந்திருக்கிறேன்.

    கே: ஆசிரியர்களின் ஆளுமைப்பண்பு எப்படியிருக்க வேண்டும் ?

    ஆசிரியர்கள்  தான் எதிர்கால சமுதாயத்தின் ஏணிப்படி என்று சொல்வார்கள். அதனால் தான் ஆசிரியர் பணியை அறப்பணி என்று சொல்கிறார்கள்.

    ஆசிரியர்கள் அணியும் ஆடையில் மிகவும் அக்கரையுடையவர்களாக இருக்க வேண்டும்.

    எப்போதும் சுறுசுறுப்பாகவும், மாணவர்களை ஈர்க்கும் படி, வகுப்பிற்கு வரும் அந்த ஒரு மணிநேரம் மிகவும் பயனுள்ள வகையில் கருத்துக்களைப் போதிக்க வேண்டும்.

    மாணவர்களை விட ஆசிரியர்கள் அதிகம் படிக்க வேண்டும். மாணவர்களுக்கு எழும் ஐயங்களை அவ்வப்போதே தீர்க்கும் வல்லமையுடையவர்களாக இருத்தல் வேண்டும்.

    மாணவர்கள் ஆசிரியர்களை கூர்ந்து கவனிப்பார்கள். இதனால் பயம் பதட்டம், தடுமாற்றம், பிழை போன்றவற்றை தவிர்த்திடல் வேண்டும்.

    வெறும் புத்தகப் பாடத்தை நடத்தாமல், அந்த பாடம் சம்மந்தமான இடத்திற்கே மாணவர்களை அழைத்துச் சென்று அவர்களுக்கு புரியும் படி கற்றல் பயிற்சியை கொடுக்க வேண்டும்.

    தன் பாடம் சார்ந்த அறிவு மட்டும் இல்லாமல் எல்லாத் துறைகளிலும் புலமைப் பெற்றவர்களாக ஆசிரியர்கள் தங்களை தகவமைத்துக் கொள்ளல் வேண்டும்.

    எத்துறை ஆசிரியராக இருக்கிறோமோ அத்துறையினை உயர்வாக எண்ணி கற்பித்தல் வேண்டும்.

    இப்படி பல நற்குணங்கள் கலவை தான் ஆசிரியர்களின் பிம்பமாக பிரதிபலிக்கிறது.

    கே: ஒரு ஆசிரியர்களின் வெற்றி எதை மையமிட்டு இருக்க வேண்டும்?

    உலகத்திலே தன்னை விட தன் மாணவர்கள் உயர்ந்து விட்டார்கள் என்று பொறாமைபடாத ஒருவர் என்றால் அது ஆசிரியர்கள் மட்டும் தான்.

    தன்னிடம் படித்த ஒரு மாணவன் தற்போது ஒரு துறையில் சான்றோனாக இருக்கிறான் என்று பிறர் சொல்லி கேட்கும் போது அவர்களுக்கு அது தான் பெரிய வெற்றி மகிழ்ச்சி.

    என்னிடம் படித்த எத்தனையோ மாணவர்கள் இன்று பல துறைகளில் சாதனையாளர்களாக இருக்கிறார்கள். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் யூஜிசி சேர்மன் முனைவர் திரு. தேவராஜ், கேஎம்சிஎச் மருத்துவமனையின் தலைவர் நல்ல பழனிசாமி, கே.ஜி. மருத்துவமனையின் தலைவர் டாக்டர். பக்தவச்சலம், டாக்டர். மாணிக்கராஜ் குழந்தைகள் நல மருத்துவர், முன்னாள் அமைச்சர் திரு கண்ணப்பன், சங்கரா கண் மருத்துவமனை நிறுவனர், டாக்டர். ரமணி, நீலகிரி பிரபல டாக்டர்கள் பி. சுதர்சனம், டாக்டர். பி. பத்பநாபன்  போன்றவர்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக தற்போதும் மருத்துவர்களாகப் சேவை செய்து கொண்டிருக்கிறார்கள். இதை எண்ணும் போதெல்லாம் மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிது.

    கே: கலைக்கதிர் மாத இதழில் தாங்கள் இணைந்தது பற்றி?

    1951 ஆம் ஆண்டு கலைக்கதிர் இதழ் தொடங்கப்பட்டது. நான் அப்போது சென்னையில் கல்வி கற்று கொண்டிருந்தேன். இவ்விதழில் அப்போது திருவாளர்கள் டாக்டர் ஜீ. ஆர். தாமோதரன், பி. ஆர். கிருஷ்ணமூர்த்தி, தா.ஏ ஞானமூர்த்தி, மா.ரா.போ குருசாமி, இருசு பிள்ளை, ராஜமணிக்கம் போன்றவர்கள் பணியாற்றி கொண்டிருந்தார்கள்.

    இவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து அறிவியல் தமிழ் கலைக்கதிர் இதழைத் தொடங்கி நம்முடைய ஆசிரியர்களிடம் கட்டுரையை வாங்கி இப்புத்தகத்தில் இடம் பெற செய்ய வேண்டும் என்று நினைத்தார்கள்.

    பத்திரிகை தொடங்கி நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் நான் கோவைக்கு வருகிறேன். அப்போது நானும் இந்த இதழில் தாவரவியல் சார்ந்த கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். தமிழில் தாவரவியல் பற்றிய கட்டுரைகள் எழுதியது அக்காலத்தில் மிகவும் வரவேற்பினைப் பெற்றது. பிற்காலத்தில் அதை ஒரு புத்தகமாகவே எழுதி வெளியிட்டேன். இது பல கல்லூரிகளுக்கு பாடத்திட்டமாக இருக்கிறது.

    மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள் இணைந்து தொடங்கிய இந்த கலைக்கதிர் இதழ் இன்றும் புகழ்பெற்ற இதழாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த இதழை மேலும்

    தன்னம்பிக்கை மேடை

    நேயர் கேள்வி…?

    படித்தப் படிப்பிற்கு ஏற்ற வேலை தேடுவது நல்லதா? அல்லது படிப்பொன்றும், கிடைத்த வேலை ஒன்றும் செய்வது நல்லதா?

    இராமலிங்கம்

    பட்டதாரி

    கோவை.

    உயர்படிப்பு படிப்பதே உயர் பதவி வேலைக்காகத்தான். படிப்பிற்கேற்ற வேலை தேடுவதும் நல்லதுதான், ஆனால் படிப்பிற்கேற்ற வேலை கிடைப்பது இன்று சிரமமாகி விட்டது. இது பொறியியல் பட்டதாரிகளுக்கு சரியாகப் பொருந்தும்.

    நீங்கள் இந்த கேள்வி கேட்ட மாத்திரத்திலேயே, நான் என்ன படிப்பு படித்தேன், ஆனால் என்ன வேலை செய்கிறேன், என்று எண்ணிப் பார்த்தேன். நான் படித்தது விவசாயம், முதுகலைப்பட்ட படிப்பு, ஆனால் 32 ஆண்டுகள் வேலை செய்வதோ காவல் துறையில், இரண்டு ஆண்டுகள் வங்கி அதிகாரியாகவும் பணி செய்துள்ளேன். இதுவே ஒரு முரண்பாடாகத் தெரிகிறது அல்லவா?.

    ஆனால் இதில் எந்த தவறுமில்லை. எந்த படிப்பும் படிக்கலாம் பின்னர் என்ன வேலையும் செய்யலாம். அந்த வேலை பிடிக்கவில்லை என்றால் இன்னொரு வேலை கூட தேடலாம் என்பது தான் 21 ஆம் நூற்றாண்டின் வேலை வாய்ப்பு விதியாக இருக்கிறது.

    இன்று பல துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களை சற்று உன்னிப்பாக கவனியுங்கள். தமிழ் எழுத்தாளர் மறைந்த சுஜாதா (ரங்கராஜன்) ஒரு மின்னணு பொறியியல் பட்டதாரி, பத்திரிக்கையாளர் குருமூர்த்தி ஒரு பட்டியலிடப்பட்ட கணக்காளர் (Chartered Accountant). மறைந்த கவியரசு கண்ணதாசன் கல்லூரியில் படிக்கவில்லை. ஆக ஒருவருக்கு ஒரு பணியின் மீது ஆர்வம் ஏற்பட்ட பிறகு அவர் அந்தத் துறையைப் பற்றி அதிகம் கற்றுக் கொள்வார், அப்படியே அவரது அறிவையும் திறமையையும் வளர்த்துக் கொள்வார்.

    கல்வி கற்காமல் ஒருவர் எந்தத் துறையிலும் பிரகாசிக்க முடியாது என்பது உண்மைதான். ஆனால் அது, பள்ளியிலும் கல்லூரியிலும் தான் கற்க வேண்டும் என்பது இல்ல, வீட்டிலும், வீதியிலும், அங்காடியிலும், நூல்களிலும், அனுபவத்திலும் கூட அந்தத் தொழில் சார்ந்த கல்வியைக் கற்கலாம்.

    சாதிக்க, கல்வி என்பது அடிப்படை, அது உயர்கல்வி சாலையில் கற்பது சிறந்தது என்பதில் சந்தேகமில்லை. பல ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் சிலருக்கு மேற்கத்திய நாடுகளில் படிக்க வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் செல்வந்தர்களாக இருந்தர்கள்; சிலர் செல்வந்தர்களின் ஆதரவோடு படிக்கச் சென்றர்கள். அங்கு கணிதம், சட்டம், உலக வரலாறு, பொருளாதாரம், அரசியல், தத்துவம், அறிவியல், முன்னேற்றம் என்று கற்று அறிந்தார்கள். அதோடு நாகரிக மக்களின் சமத்துவக் கொள்கை, ஜனநாயகம், தனிமனித உரிமை, சமூக நீதி போன்வற்றையும் தெரிந்து கொண்டார். இவர்கள் இந்தியாவிற்குத் திரும்பி வந்ததும் இந்திய மக்கள் படும் துன்பங்களைக் கண்டு கதி கலங்கினார்கள், எனவே அவர்களின் விடுதலைக்காகக் குரல் கொடுத்தனர். அப்படியே களத்தில் இறங்கிப் போராடினர். அப்படிப்பட்டவர்களில் முக்கியமானவர்கள் தாதாபாய் நவரோஜி (1825 – 1917), மகாத்மா காந்தி (1869 – 1948), ஜவகர்லால் நேரு (1889 – 1964) மற்றும் பி. ஆர். அம்பேத்கர்(1891 – 1956) இவர்கள் பிற்காலத்தில் இந்தியாவின் அரசியல் சட்டத்தை எழுதினார்கள். அவர்கள் அன்று இங்கிலாந்து பல்கலைக் கழகங்களில் பயின்ற உயரிய கல்வி அவர்களுக்குப் பெரிதும் உதவியது. இவர்கள் பல்கலைக்கழகப் பேராசிரியர்களிடமிருந்தும், நூலகங்களிடமிருந்தும் அறிவை சேகரித்தார்கள்.

    ஆனால் எந்தக் கல்லூரி கல்வியும் இல்லாத பெருந்தலைவர் காமராஜர், தேசத் தலைவராகத் திகழ்ந்தார். ஒரு பிரதம மந்திரியை தேர்வு செய்யும் ‘கிங் மேக்கர்’ என்று ஜொலித்தார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக மூன்று முறை பதவி வகித்தார். அவரது காலத்தில் தான் பவானிசாகர் அணை, கீழ் பவானி, ஆழியார் -பரம்பி குளம் போன்ற பல அணைத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இவர் கல்விக்கண் திறந்த அரசியல் வித்தகர். ஆனால் இவர் எந்தக் கல்லூரியிலும் படிக்கவில்லை. குடும்ப சூழ்நிலை, அரசியல் மேடை, தலைவர்களுடன் நெருக்கம், அதிகாரிகள் பழக்கம், சிறைச்சாலை அனுபவம், செய்தித்தாள் வாசிப்பு ஆகியவை அவருக்கு தரமான பயனுள்ள கல்வியைக் கற்றுத் தந்திருக்கிறது. அதனால் அவரால் இங்கிலாந்தில் கற்றவர்களுக்கும் ஒருபடி மேலே போய் நிற்க முடிந்திருக்கிறது.

    இந்த இதழை மேலும்

    வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 12

    இலக்குகள்!

    (GOALS)

    இந்த நூலின் ஆசிரியர் பிரையன் டிரேசி (Brain Tracy) ஆவார். (இந்நூலினைத் தமிழில் நாகலட்சுமி சண்முகம் மொழியாக்கம் செய்துள்ளார். மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ் வெளல்யிட்டுள்ளது.) “கடவுள் வீணானவற்றைப் படைப்பதில்லை” உலகில் பிறந்த ஒவ்வொருவரிடமும் ஏதோ ஒருவகையான மேதமையை அடைவதற்கான திறனை கடவுள் கொடுத்திருக்கிறார். ஆனால் பெரும்பாலோர் “நான் போதுமானவனல்ல” என்ற உணர்வுடன் வாழ்வதே நம்முடைய பெரும்பாலான பிரச்சினைகளுக்கான வேர்கள். இந்தத் தடையை முதலில் கடந்து நீங்கள் அறிந்துள்ளதை விடவும் நீங்கள் அதிகச் சிறப்பானவர் என்று உணரும்போது; எல்லாராலும் நீங்கள் அதிகச் சிறப்பானவர் என்று உணரும்போது; எல்லோராலும் தமக்கான இலக்குகளை அடைவதில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது என்று பிரையன் டிரேசி கூறுகிறார்.

    பெரும்பாலானோருக்கு, தாங்கள் குறிவைக்கும் இலக்குகள் வெறும் கனவாகவே இருந்து விடும்போது, ஒரு சிலரால் மட்டும் தாங்கள் தேர்ந்தெடுக்கும் இலக்குகள் அனைத்தையும் எப்படி அடைந்து விடமுடிகிறது? இதற்கான விடை ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டு விட்டது என்கிறார் பிரையன் டிரேசி. ஒரு சில வெற்றியாளர்களுக்கு மட்டுமே தெரிந்திருந்த அந்த ரகசியங்களை இப்புத்தகத்தில் அவர் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

    இலக்குகளை நிர்ணயிக்கவும் அவற்றை அடையவும் தேவையான, நடைமுறைக்கு உகந்த நிரூபணமான உத்திகளைத் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறது இந்த நூல். எந்தவிதமான இலக்குகளாக இருந்தாலும் சரி, அவற்றை அடையத் தேவையான 12 அம்சத்திட்டம் ஒன்றை பிரையன் டிரேசி இந்நூலில் முன்வைக்கிறார். ஒருவருடைய வலிமைகளை எவ்வாறு அடையாளம் காண்பது, சுயமதிப்பையும் சுய துணிச்சலையும் எவ்வாறு வளர்த்தெடுப்பது, சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது போன்றவற்றை ஆசிரியர் இப்புத்தகத்தில் அறிவியற் பூர்வமான கண்ணோட்டத்துடன் அணுகுகிறார்.”இலக்குகளின்றி வெற்றி இல்லை” என்பது பிரைன் டிரேசியின் மந்திரக்கோட்பாடு. எந்தவோர் இலக்கையும் நிர்ணயித்து, அதை அடைவதற்கான பன்னிரண்டு அம்ச வழிமுறையை வருமாறு குறிப்பிடுகிறார் ஆசிரியர்.

    இலக்கை அடைய 12 வழிமுறைகள்

    • ஓர் ஆழ் விருப்பத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்; உங்களுக்கு உண்மையிலேயே என்ன வேண்டும்.
    • உங்களுடைய இலக்கு அடையப்படக்கூடியதுதான் என்று நம்புங்கள்.
    • உங்கள் இலக்குகளை எழுதிக்கொள்ளுங்கள்.
    • உங்களுடைய துவக்கப் புள்ளியைத் தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
    • ஏன் அது உங்களுக்கு வேண்டும் என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
    • ஒரு காலக்கெடுவை நிர்ணயித்துக்கொள்ளுங்கள்.
    • உங்கள் வழியிலுள்ள முட்டுக்கட்டைகளைக் கண்டுபிடியுங்கள்.
    • உங்களுக்குத் தேவையான கூடுதல் அறிவும் திறமைகளும் எவை என்று தீர்மானியுங்கள்.
    • உங்களுக்கு யாருடைய உதவி தேவைப்படும் என்பதைக் கண்டு பிடியுங்கள்.
    • எல்லாவற்றையும் ஒன்றிணைத்து ஒரு திட்டத்தை உருவாக்குங்கள்.
    • உங்கள் இலக்கைத் தொடர்ந்து மனக்காட்சிப்படுத்துங்கள்.
    • உங்கள் முயற்சியை ஒருபோதும் கைவிடாதீர்கள்.

    12 அம்ச வழிமுறையைச் செயலாக்குதல்

    12 அம்ச கொள்கைகளை நீங்கள் உங்கள் வாழ்வில் கடைப்பிடிக்கும் போது, நீங்கள் சாதிக்கத் துவங்குகிற விஜயங்களைக் கண்டு நீங்கள் உண்மையிலேயே அசந்துபோவீர்கள். நீங்கள் அதிக நேர்மறையான, அதிகச் சக்திவாய்ந்த, அதிகச் செயற்திறன் கொண்ட நபராக ஆவீர்கள். நீங்கள் உயர்ந்த சுயமதிப்பையும் தன்னம்பிக்கையையும் கொண்டிருப்பீர்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் நீங்கள் ஒரு வெற்றியாளரைப் போல உணர்வீர்கள். எல்லாம் உங்கள் கட்டுப்பாட்டில் இருப்பது போல நீங்கள் உணர்வீர்கள். உங்களிடம் அதிக ஆற்றலும் உற்சாகமும் இருக்கும். இதன்விளைவாக, சராசரி நபர்கள் பல வருடங்களில் சாதிக்கக்கூடியவற்றை நீங்கள் ஒருசில வாரங்களில் அல்லது மாதங்களில் சாதித்துவிடுவீர்கள்.

    வாழ்நாள் முழுவதும் இலக்குகளை நிர்ணயிக்கும் பழக்கத்தைக் கடைபிடிக்கும் ஒருவராக நீங்கள் ஆகும்போது, ஆய்வு மற்றும் பயிற்சியின் மூலமாக வெற்றிக்கான இந்த முதன்மையான திறமையை உங்கள் ஆழ்மனத்திற்குள் நீங்கள் பதிய வைக்கிறீர்கள். நம் சமுதாயத்தில் மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் நீங்கள் சேர்ந்துகொண்டு, மிகவும் மகிழ்ச்சிகரமான, மிகவும் வெற்றிகரமான மக்களில் ஒருவராக ஆவீர்கள்.

    இலக்கை அடைவதற்கான முக்கியத்திறன்

    உங்கள் இலக்குகள் என்னவாக இருந்தாலும் சரி. அந்த இலக்குகளை அடைவதற்கு நீங்கள் செய்துமுடிக்க வேண்டிய அனைத்து வேலைகளையும் ஒரு பட்டியலிட்டுக் கொள்ளுங்கள். அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு காலக்கெடுவை நிர்ணயம் செய்துகொள்ளுங்கள். பிறகு, குறித்த காலத்திற்குள் அவற்றைச் செய்து முடிப்பதற்கு ஒவ்வொரு நாளும் கடினமாக உழையுங்கள். ஒவ்வொரு நாளும் உங்கள் முன்னேற்றத்தை அளவிடுங்கள். தேவைப்படும் இடங்களில் உங்கள் வேகத்தைக் கூட்டவோ அல்லது குறைக்கவோ செய்யுங்கள். ஆனால் ஒரு விஜயத்தை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்; உங்களால் பார்க்க முடியாத ஓர் இலக்கை உங்களால் ஒருபோதும் குறிவைத்துத் தாக்க முடியாது. எனவே உங்களுடைய காலக்கெடுக்கள் மற்றும் அளவீடுகள் குறித்து உங்களுக்கு எவ்வளவு அதிகத் தெளிவு இருக்கிறதோ; அவ்வளவு அதிகமானவற்றை நீங்கள் சாதிப்பீர்கள்; அவற்றை அவ்வளவு அதிக விரைவாகவும் செய்து முடிப்பீர்கள்.

    காலக்கெடு இல்லாத ஓர் இலக்கோ அல்லது ஒரு தீர்மானமோ வெறுமனே ஓர் ஆசை மட்டுமே. அதன் பின்னால் எந்த ஆற்றலும் இல்லை. வெடிமருந்து இல்லாத ஒரு தோட்டாவைப் போன்றது இது. காலக்கெடுக்களை நிர்ணயித்துக் கொள்ளாதவரை வாழ்க்கையிலும் சரி, வேலையிலும் சரி, நீங்கள் எதையுமே சாதிக்கமாட்டீர்கள்.

    ஒரு யானையைச் சாப்பிடுவது

    “ஒரு யானையை எவ்வாறு சாப்பிடுவது” என்ற கேள்வியை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். “ஒரு நேரத்தில் ஒரு துண்டு” என்பது தான் அதற்கான விடை. எந்தவொரு பெரிய இலக்கை அடைவதற்கும் இது பொருந்தும். ஒரு மிகப்பெரிய இலக்கை எவ்வாறு அடைவது? ஒரு நேரத்தில் ஒரு செயல், ஒரு நேரத்தில் ஒரு நடவடிக்கை என்ற ரீதியில்தான்.

    உங்களுடைய நீண்ட கால இலக்கை வருடாந்திர, மாதாந்திர, வாராந்திர இலக்குகளாகக் கூறு போட்டுக்கொள்ளுங்கள். சில சமயங்களில் ஒவ்வொரு மணிநேரமும் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்ற ரீதியில்கூட நீங்கள் உங்கள் இலக்குகளைக் கூறு போட வேண்டியிருக்கும். இப்படியாகச் சிறு, சிறு துண்டுகளாகச் செய்து பெரிய இலக்கை ஒருவர் அடையலாம் என்பது ஒரு யானையைச் சாப்பிடுவது என்ற எடுத்துக்காட்டின் வழி விளக்குகிறார் பிரையன் டிரேசி. உங்களுடைய மிக முக்கியமான இலக்கிற்கு ஓரடியாவது அருகே செல்லக்கூடிய ஏதாவது ஒரு நடவடிக்கையை ஒவ்வொரு நாளும் செய்தாலே இலக்கை அடைந்துவிடலாம் என்று இந்த நூலில் இடம்பெற்றுள்ள செய்திகள் திரும்பத் திரும்ப வலியுறுத்துகின்றன.

    இந்த இதழை மேலும்

    பேச்சுக்கலைக்கு பெருமை சேர்க்கும் பெண்மணி…

    ச. குருஞானாம்பிகா

    உதவிப் பேராசிரியர்

    அவினாசிலிங்கம் மனையியல்

    மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனம்

    கோவை.

    மெட்ரோவின் வேகத்தையும் மிஞ்சி ஓடிக்கொண்டிருக்கிறது, இன்றைய மக்களின் வாழ்க்கைச் சூழல். ஓவ்வொரு மனிதனும் வெற்றிக்கான விநாடிகளைத் தேடிக்கொண்டும்அதற்கான முயற்சிகளைச் செய்தும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு வெற்றியைத் தேடி ஓடிக்கொண்டீருக்கும் மனிதர்கள் வெற்றியை அடையத் தேர்ந்தெடுக்கும் வழிகளில் ஒன்று வெற்றி தேவியின் அருள் பெற்ற சிலரின் அறிவுரைகளின் வழி நடப்பது. அவ்வாறு வெற்றி தேவதையின் அருளைப் பெற்ற வெற்றித் திருமகள் திருமதி. ச. குருஞானாம்பிகா அவர்கள் சிறந்த சொற்பொழிவாளரும் சிந்தனைக்குச் சிறந்த மேடைப் பேச்சாளரும் ஆவார். அவர் தன்னுடைய வெற்றி அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டு வெற்றிப் பாதைக்கு வழிகாட்டுகிறார்.

    திருமதி. ச. குருஞானாம்பிகா அவர்கள் 15 வருடங்களாகக் கல்லூரி; ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். கடந்த ஆறு வருடங்களாக அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தில் தமிழ்துறை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவரைப் பல மேடைகள் கண்ட ஓரு மாபெரும் படைப்பாளி என்றும் கூறலாம். நம் அறிவிற்கு இனிய சிந்தனைச் சித்திரங்களைப் பேச்சு மேடைகளிலும் பட்டிமன்ற மேடைகளிலும் பகிர்ந்தளித்தவர். மேலும் இவர் ஒரு சிறந்த கவிஞரும் கூட.

    பள்ளிப் பருவத்தில் இருந்தே தமிழ் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். அன்றிருந்தே தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு தனது பங்களிப்பும் இருக்கவேண்டும் என்ற அறிவுப்பசி அவருக்குத் தோன்றியது. அக்கணமே அவரது தேடல்கள் தொடங்கின. பள்ளி பயிலும் போதே பத்திரிக்கைகளுக்கு கட்டுரை எழுதுதல், கவிதைகள் எழுதுதல் என்று தன்னை மேம்படுத்திக் கொண்டார். பள்ளிப் படிப்பை முடித்துக்கொண்டு கல்லூரியில் தமிழ்த் துறையில் சேர்ந்து உயர்கல்வியைத் தொடர்ந்தார். அப்பொழுது கல்லூரி சார்பாக நடக்கும் அனைத்துப் போட்டிகளிலும் கலந்து கொள்வதைத் தனது வழக்கமாகக் கொண்டிருந்தார். கவிதை எழுதுவதில் மிகுந்த ஆர்வம் உடையவர்.

    கல்லூரி மேடைதான் அவருக்கு முதல் மேடை. அவர் மேலும் மேலும் கற்றுக் கொள்ளச் சிறந்த அனுபவங்களைக் கொடுத்தது கல்லூரி மேடைகள் என்றே கூறலாம். கல்லூரிக் காலங்களில் நாடகங்கள் நடித்ததும் அவருக்கு ஒரு சிறந்த அனுபவமாக அமைந்தது. அவர் தனது பேச்சுத் திறமைக்கு முதலிடம் கொடுக்கவில்லை. அதனை ஒரு துணைத் திறமையாகவே கருதினார். முதலிடத்தில் அவரை ஆட்கொண்டது கவிதையே. 2006 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் நிறுவனம் நடத்திய 10,200 பேர் கலந்து கொண்ட கவிதைப் போட்டியில் 2 வது இடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளார். அத்தருணமே அவரை மேலும் சாதிக்கத் தூண்டிய தருணமாக அமைந்தது.

    2001 ஆம் ஆண்டில் இருந்து பேச்சுத் துறையில் காலடி பதித்தார். ஊடகங்களில் பேச ஆரம்பித்து 2003 ஆம் ஆண்டில் இருந்துதான். புதுமைப் பெண்கள் என்னும் தலைப்பே இவரின் முதல் ஊடகத் தலைப்பாக அமைந்தது. 120 நபர்கள் கலந்து கொண்ட அந்தப் பேச்சரங்கில் 18 நபர்களைத் தேர்ந்தெடுப்பதே விதிமுறையாகும். ஒரு வாரம் நடைபெற்ற அந்தத் தேர்விற்கு இறுதிப் பட்டியலும் வந்தது. அந்தப் 18 நபர்களில் தனது பெயரும் இடம் பெறுமா? என்று எதிர்பாத்துக் காத்திருந்த அந்தத் தருணத்தில் 18 நபர்களின் பெயரையும் படித்து முடித்துவிட்டார்கள். அவரின் பெயர் அதில் இடம் பெறவில்லை என்பது அவருக்கு ஏமாற்றத்தை அளித்தது. ஆனால் ஓரு இன்ப அதிர்ச்சி அவருக்கு காத்திருந்தது. பட்டியலில் இருந்த 18 நபர்களுக்கும் நடுவராக அவர் தேந்தெடுக்கப் பட்டிருந்தார். அது அவரை ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது. அவர் அதனை மிகப் பெரிய வெற்றியாகக் கருதினார். அந்த வெற்றியே அவரை மேலும் சிறப்பாகச் செயல்படத் தூண்டியது. பிறகு பல தொலைக்காட்சிகளிளலும் வாய்ப்புக்கள் கிடைத்தது. அவரை வழிநடத்திய நடுவர்களும் மிகத் திறமை வாய்ந்த நடுவர்களாகக் காணப்பட்டனர்.  குறிப்பாக திரு. சாலமன் பாப்பையா, கு. ஞான சம்பந்தன், திரு. ராஜா போன்ற நடுவர்கள் ஆரம்ப காலத்தில் இவரது வெற்றிக்கு உதவியவர்கள் என்று கூறியிருக்கிறார்.

    எந்தவொரு மேடையாக இருந்தாலுமே தயாரிப்பு என்பது அவசியம். தயாரிப்பு இன்றிப் பேசும் செய்திகள் தரமற்றவை என்ற சிந்தனையை மனதிற் கொண்டு ஒவ்வொரு இடத்தையும் முதல் இடம் ஒவ்வொரு மேடையும் முதல் மேடை என்றே கருதுவார். எந்த மேடையிலும் கூறியதைத் திரும்பக்கூறும் பழக்கம் அவரிடம் இல்லை. ஒவ்வொரு மேடைக்கும் புதிய கருத்துக்களைச் சேர்ப்பதே அவரின் முறையான பழக்கமாக இருந்து வந்துது. வெறுமனே திரைப்பட வசனங்களையெல்லாம் உபயோகித்து கருத்துக்களைச் சுருக்குவதை அவர் விரும்புவதில்லை.

    எவரும் தங்களைத் தாங்களே தாழ்வாக எடைபோடக் கூடாது. நாம் பேசுவது சரியா? தவறா? என்று யோசிக்கும் நேரத்திற்குள் நமக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்புக்கள் பறிக்கப்பபடும். எனவே சொல்ல வருவது சரியோ? தவறோ? தைரியமாகத் தன்னம்பிக்கையுடன் கூறவேண்டும் என்பதே இவரின் தலைமை அறிவுரை.

    இந்த இதழை மேலும்

    உயிரின் உதிரம்…

    சூரியனின் வெட்பமும் வேதனைக்கொள்கிறது, அந்த இராணுவ வீரர்களின் இரத்தக்கரையை சுடுவதற்கு யாருமில்லா நிலையில் நாளைதான் அந்த உயிரற்ற வீரர்களின் உதிரத்தில் காய்ந்த உடல்களை காணவருவார்கள் மற்றவர்கள். நேரம் கடந்து, இரவும் நிலவைக் கொடுக்கிறது. அந்த வீரமகன்களின் உடல்களை இறுதியாக காதலிப்பதற்கு. ஆனால், இறந்தவர்களில் ஒருவரின் உடல் மட்டும் துடிக்கிறது, தன் தாய் மண்ணிலே மீண்டும் இறக்க வேண்டும் என்பதற்காகவும், மேலும் தன்னை மார்பிலே சுட்டுக்கொன்றவன் கையில் மீண்டும் சாக வேண்டும் என்பதற்காகவும்.

    அந்த உறவின் கதையைப்பற்றிக் காண்போம்.

    அன்று மாலை 4.30 மணி, இராணுவ வீரர்கள் தன் நாட்டின் எல்லையிலே பாதுகாப்பு பணியில் இருந்தார்கள். அமைதி கொண்ட வானில் திடீர் மின்னலின் ஒளியைப் போல், அப்போது ஒரு குழந்தையின் அழுகைக்குரல் கேட்கிறது. வீரர்கள் சென்று பார்த்து போது ஒரு மூன்று வயது சிறு ஆண்பிள்ளை ஒரு மரத்தின் கிளையில் அடிபட்ட நிலையில் இருந்தான். யார் அந்தப் பிள்ளை, எப்படி இங்கு வந்தான் என்ற சோதனையில் விவரம் தெரியவில்லை, எனவே, அந்த ஆண்பிள்ளையை, பல பீரங்கிகளையும், தூப்பாக்கிகளையும் கண்ட அந்த வீரக் கைகள் பாசத்துடன் காத்தது.

    சில வாரங்களுக்கு பிறகு அந்த சிறிய பிள்ளைக்கு முகமது மற்றும் தாமஸ் என்ற தலைமை அதிகாரிகள் அவனுக்கு ஏகன் என்ற அழகிய பெயர் சூட்டினர். அதில் சாரியார் என்ற இராணுவ வீரருக்கு ஏகனை மிகவும் பிடித்திருந்தது, ஏகன் சாரியாரை குருநாத் என்ற பெயரோடே அழைப்பான்.

    சாரியார் ஏகனுக்கு அனைத்து இராணுவ பயிற்சிகளையும் கற்றுக் கொடுத்தார். ஏகன் வளர வளர அவனுக்கு நாட்டுப்பற்றையும், நாட்டின் கடமைகளையும், ஒழுக்கத்தின் வீரத்தைப் பற்றியும் விளக்கினார் சாரியார்.

    ஆனால், அதில் சிலர் இவன் யார் எந்த நாட்டுப்பிள்ளை என்று தெரியாமல் இப்படி நம்பிக்கை வைப்பது சரியில்லை என்கிறார்கள். அதையெல்லாம் சாரியார் பொருட்படுத்தவில்லை.

    ஒரு நாள் ஏகனை எதிர்நாட்டவரிடம் தூதராக அனுப்ப வேண்டிய நிலை. அவன் அந்த எதிர்நாட்டிற்கு சென்ற போது தான் தெரிந்தது, அவன் அந்த நாட்டைச் சார்ந்த பிள்ளை என்று, அதனால் அவனை வளர்த்த வீரர்கள் ஏற்கு மறுத்தனர். அவன் தன் ஆசிரியரின் (சாரியார்) நாட்டுப்பற்று மொழியால் தன் சொந்த நாட்டிலே இராணுவ வீரனாக இணைந்தான்.

    இந்த இதழை மேலும்

    நில்! கவனி!! புறப்படு!!! – 7

    நேர் மறை மனிதர்களை தேர்ந்தெடுங்கள்!

    வாழ்வில் வெற்றிக்காற்றை மட்டுமே சுவாசிக்கும் நண்பர்களே!

    “அனைத்திலும் சிறக்கும் ஆறு லட்சம் குடும்பங்கள்” – ஒரு ஆரோக்கியமான அடுத்த தலைமுறையை உருவாக்குவதே உங்கள் வண்ணமயமான வாழ்வுக்கு வழி காட்டும் வாழ்வியல் பயிற்சியாளரான என் லட்சியம்.

    அந்த ஆனந்தக்குடும்பத்தில் உங்களையும் இணைத்துக்கொள்ள – இந்தத்தொடர் ஒரு இணைப்புப்பாலம்.

    நேர் மறை மனிதர்களை தேர்ந்தெடுங்கள்!

    ஒரு கிராமத்தின் தேநீர் கடையின் வழியாக ஒரு சிறுவன் சென்று கொண்டிருந்தான்.   அப்போது ஒரு பெரியவர் அந்த சிறுவனை அழைத்து “தங்கம் உயர்ந்ததா – வெள்ளி உயர்ந்ததா? – என்று கேட்டார்.  சிறுவன் “வெள்ளி தான்” என்று சொல்ல – “இந்தா பிடி என்று சொல்லி பத்து ரூபாய் கொடுத்தார்.  சிறுவன் சென்றதும் “இவன் முட்டாள் என்று ஒத்துக்கொள்கிறீர்களா? என்று கூட்டத்தில் கேட்க – எல்லோரும் ஆமாம் என்று ஆமோதித்தார்கள்.  இந்த சம்பவம் ஒரு தொடர் நிகழ்ச்சியாக தினமும் நடந்து வந்தது.

    சில நாட்களாக இதை வேடிக்கை பார்த்துவந்த ஒருவன் ஒரு நாள் அந்த சிறுவனை அழைத்து “தினமும் இவரிடத்தில் அவமானப்படுகிறாய்.  இதை ஏன் நீ உணர்வதில்லை.  நிஜமாகவே நீ முட்டாள் தான்” – என்று சொல்ல – அந்த சிறுவன் இப்படி சொன்னான்.

    “ஐயா!  அந்த பெரியவருக்கு தான் மிகவும் புத்திசாலி என்று ஒரு இறுமாப்பு உண்டு.  தற்பெருமை போக்கும் உண்டு.  அவருக்கு துதி பாட ஒரு கூட்டமும் எப்போதும் அவருடன் உண்டு.  என்னை அவமானப்படுத்தி தினமும் தன்னை புத்திசாலி என்று காட்டிக்கொள்ள அவர் விரும்புகிறார்.  “தங்கம் தான் சிறந்தது என்று எனக்கும் தெரியும்.  நான் தவறாக சொல்லும்போதெல்லாம் அவர் பத்து ரூபாய் கொடுப்பது வழக்கம்.  இது ஐந்து மாதங்களாக தினமும் நடக்கும் விஷயம் தான்.  அதன் விளைவாக என்னிடம் ரூ. 1500/- க்கு மேல் உள்ளது.  இப்போது சொல்லுங்கள் “நான் முட்டாளா – அவர் முட்டாளா”?

    உண்மைதான்.  அந்த சிறுவன் தான் புத்திசாலி.

    அந்த பெரியவர் எதிர் மறை சிந்தனை கொண்டவராக மட்டுமல்லாமல் – எதிர் மறை சிந்தனை கொண்ட ஒரு கூட்டத்தையும் தன்னுடன் சேர்த்து வைத்துள்ளார்.

    நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் – எந்த தன்மை கொண்டவர்களோடு நட்பு வைத்திருக்கிறீர்கள் என்பதில் தான் உங்களின் வெற்றி அடங்கி இருக்கிறது.

    கூடா நட்பு – கேடாக முடியும் என்பதே உண்மை.

    முன்னேற்றம், வெற்றி, சாதனை – என்று சிந்திக்கும் எண்ணம் உள்ளவர்களை மட்டுமே எப்போதும் உங்கள் அருகில் வைத்துக்கொள்ளுங்கள்.  நண்பராக, உறவினர்களாக, ஆசிரியர்களாக – இப்படி.

    அவை உயர்ந்த குணங்கள்.  அந்த குணம் உள்ளவர்களை தேர்ந்தெடுங்கள்.  ஏனென்றால் அவர்கள் தான் வெற்றியை நோக்கி பயணிப்பவர்கள்.  மற்றவர்களையும் வெற்றிப்பாதையில் அழைத்து செல்பவர்கள்.  மற்றவர்களும் வெற்றி பெற உதவுபவர்கள்.

    நேர்மறை மனிதர்கள் (+ve People) எப்படி வெற்றியை நோக்கி செல்கிறார்களோ – அதேபோல் எதிர்மறை மனிதர்கள் (-ve People) தோல்வியை, விரக்தியை நோக்கியே பயணிக்கின்றனர்.

    இவர்களிடம் இருந்து விலகி இருப்பதுவே உங்கள் வெற்றிப்பயணத்தின் முதல் செயலாக இருக்கட்டும்.  ஆராய்சிகள் சொல்வதும் அதைத்தான்.

    நற்சிந்தனை உள்ளவரோடு குழுவாக இருப்பதே நல்லது.  எனவே, உங்கள் தற்பொழுதைய சுற்றம் எப்படி இருக்கிறது என்று பார்க்க முயலுங்கள்.

    ஒரு தாளில் உங்கள் நெருங்கிய நண்பர்களின் பெயர்களை வரிசையாக எழுதுங்கள்.

    1. —————————–
    2. —————————–
    3. —————————–

    எதிர்மறை எண்ணங்கள் கொண்டவர்கள் அந்த பட்டியலில் இருந்தால் உடனடியாக எடுத்து விடுங்கள்.

    சரி!  என் நண்பன் “எதிர்மறை” என்று எப்படி கண்டுபிடிப்பது?

    கீழ்காணும் விஷயங்களே அவர்களின் பொதுவான குணாதிசயங்கள்.

    1. எப்போதும், எதையும், எல்லோரையும் குற்றமே சொல்லிக்கொண்டு இருப்பவர்கள்.
    2. வாழ்க்கை குறித்து எப்போதும் நம்பிக்கையே இல்லாமல் பேசுபவர்கள்.
    3. தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது பற்றி கவலையே படாமல் இருப்பவர்கள். மற்றவர்கள் தீர்வு சொன்னாலும் – அதையும் குற்றமாகவே பார்ப்பவர்கள்.
    4. “கவலைப்படாதே! எல்லாம் சரியாகிவிடும், இன்னும் கொஞ்சம் முயன்று பார்” – என்று யார் உற்சாகப்படுத்தினாலும் “உனக்கு ஒன்றும் தெரியாது.  நீ புரிந்துகொள்ளவே மாட்டேன் என்கிறாய்” – என்று புலம்புவார்கள்.
    5. உங்கள் மகிழ்ச்சி கண்டு பொறுக்காமல் – நீங்களும் துன்பப்பட வேண்டும் என்று எண்ணுபவர்கள்.

      இந்த இதழை மேலும்

    புத்தங்களை நேசிப்போம் வாழ்வை சுவாசிப்போம்…

    காடுதோறும் வளர்ந்த மரங்களைப் போல். நூலகம் நிறைந்த புத்தகங்கள் ஒவ்வொன்றும். ஆயிரமாயிரம் சிந்தனையின் விதைகளைத் தாங்கிக் கொண்டுள்ளதை, படிக்க படிக்கவே உணர முடியும்.  படித்தலில் கிடைக்கும் அறிவு, சாதுர்யம் மிக்கது. படித்தலில் வரும் தெளிவு வாழ்வை மிளிர வைக்கத் தக்கது. படிப்பவரால் தான் மனதுள் ஊக்கத்தை விதைத்துக் கொள்ளமுடிகிறது.

    எப்பொழுதோ நிகழ்ந்ததை, நிகழ்ந்தது நிகழ்ந்தவாறு. இப்பொழுதும் நாம் அறிந்து கொள்ள உதவுவது, புத்தகங்கள். எங்கோ நடந்ததைக் கண்டுபிடித்து. அதனை இங்குள்ள நமக்கு விளக்குபவை நூல்களே. எவரோ அறிந்ததை, நாமும் தெரிந்து கொள்ளத் துணை நிற்பவை. நூல்கள் தாம். விலங்குகளின் வாழ்க்கை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எப்படியோ. அப்படியே தான் இன்றும். எப்படியும் வாழலாம் என்பது;விலங்கு வாழ்க்கை. இப்படித்தான் வாழ வேண்டும் என்பது மனித வாழ்க்கை. முன்பு வாழ்ந்தவர்களின் அனுபவ அறிவையும் எடுத்துக் கொண்டு அவர்கள் விட்ட இடத்திலிருந்து வாழ்வைத் தொடர்வதால் தான் மனித வாழ்க்கை தொடர்ந்து வளர்ச்சியைப் பெற்று வருகிறது.

    நடுத்தரத் தன்மையை மனதுள் நிலைக்கச் செய்தல். படித்தலால் கவரப்படுவதை. தொடர்ந்து படிப்போரால். அறிய முடிகிறது. விதைத்தால் விளையும் நிலம் போல, படிப்பினால் உதிக்கும் ஞானம், நம்மை சுற்றி இருக்கும் வெளி எங்கும் நன்மையின் வெளிச்சத்தைப் பரவச் செய்யும். மகிழ்ச்சி என்பது எது. என்று அறியக் கூடிய அறிவுக் கூர்மையை படிப்பு மேம்படுத்தும். அதன் பொருட்டாக, ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக சிந்தித்து. நாம் தாட்களை, புத்தகங்களை கண்டறியும் முன்னரே, ஓலையில் எழுதத் துவங்கிய. நமது முன்னோர்களையும் நாம் எடுத்துணர வேண்டும்.

    நாம் வரலாற்றையும், பூகோளத்தையும், கலாச்சாரத்தையும், கலையையும், அறிவியலையும், தொழில்நுட்பத்தையும்.  நல்ல புத்தகங்களின் மூலம் படித்துக் கற்றுத் தேர்ந்தால் தான், நாம். நம்மை சுற்றியுள்ள சமுதாயத்தை, ஒரு அறிவார்ந்த சமுதாயமாக மாற்ற முடியும்.

    புத்தகங்களை அடுக்கி வைத்திருக்கும். ஒவ்வொரு அகமும், அறிவும் விளக்கேற்றும் கோவில் இன்றி வேறில்லை. அவை நூலகத்திலிருந்து உருவானவை. நிறைய மேதைகள். நம் நாட்டில் உண்டு. இவ்வுலகம். ஒரு புள்ளியில் அடங்கத்தக்கது எனும் நம்பிக்கை. நமக்கெல்லாம் எவ்வளவு வலிமையானதாக உள்ளதோ. அதே அளவு, இந்த ஒரு பிறப்பின் அறிவின்னுள்ளோ அல்லது ஒரு பிறவியின் காட்சிக்குள்ளோ அடங்கிப் பொவதும் கூட இல்லை.

    இந்த இதழை மேலும்

    வெற்றி உங்கள் கையில்- 69

    அங்கீகாரங்கள் அவசியமா…?

    சில நேரங்களில் “வெற்றி” எளிதாக நமக்கு கிடைத்துவிடுகிறது. ஆனால், எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் பல வேளைகளில் நமக்கு வெற்றி கிடைப்பது கேள்விக்குறியாகிவிடுகிறது.

    நமது செயலை நாம் மிகச்சரியாகச் செய்தாலும், சில சூழல்களில் நமக்கு “அங்கீகாரம்” கிடைப்பதில்லை.

    “நீங்கள் நன்றாக பணிபுரிந்தீர்கள். அதனால் தான், இந்த வெற்றி கிடைத்தது” என்று நம்மைப் பாராட்டவும் சிலர் முன்வருவதில்லை.

    மற்றவர்களிடமிருந்து பாராட்டு பெறுவதற்காக ஏங்குகின்ற மனம் எல்லோரிடமும் உண்டு. ஆனால், எல்லோரையும் பாராட்டும் மனம் பலரிடம் இருப்பதில்லை. இதனால், பாராட்டப்படவில்லை என்பதற்காக சோர்ந்து போகவேண்டிய அவசியமும் இல்லை.

    மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு நிலையிலும் அன்பு, அரவணைப்பு, அங்கீகாரம் போன்றவைகளுக்காக ஏங்கித் தவிக்கின்ற நிலை எப்போதும் உண்டு. இவை கிடைக்காதபோது மனம் வாடிப்போய்விடுகிறது. இதனால்தான், “கடமையை செய். பலனை எதிர்பார்க்காதே” என்ற கருத்தை பலரும் வலியுறுத்திக் கூறுகிறார்கள்.

    எதிர்பார்ப்புகளை குறைத்து, உழைப்பை அதிகரித்துக்கொண்டால் பெரும்பாலான சூழல்களில் ஏமாற்றங்களை தவிர்த்துக்கொள்ளலாம்.

    அது ஒரு மளிகைக்கடை.

    ஒரு நாள் அந்தக் கடைக்கு அருகில் வந்தது ஒரு நாய்.

    கடைக்கு அருகில் வந்த நாயை விரட்டினார் கடைக்காரர். அந்தக் கடையைவிட்டு நாய் அகல மறுத்தது. மீண்டும் விரட்டினார். பயந்து ஓடிப்போன அந்தநாய், மீண்டும் அந்த கடைக்கு அருகில்வந்து நின்றது.

    “இந்த நாய் பெரிய பிரச்சினையைத் தரும்போல் இருக்கிறதே. விரட்டினாலும் மீண்டும் சுற்றிச்சுற்றி வருகிறதே!” என்று எண்ணிக்கொண்டே அந்த நாயை கூர்ந்து கவனித்தார் கடைக்காரர்.

    அந்த நாயின் வாயில் ஒரு சீட்டும், அதோடு கொஞ்சம் பணமும் இருந்தது. நாய் கவ்வியிருந்த அந்தச் சீட்டையும், பணத்தையும் எடுத்துக்கொண்டார் கடைக்காரர். சீட்டில் எழுதப்பட்டிருந்த பொருட்களை ஒரு பையில்போட்டார். அந்தப் பொருட்களுக்கான பணத்தையும் எடுத்துக்கொண்டு, மீதிப் பணத்தையும் ஒரு தாளில் சுற்றி அந்தப் பைக்குள் போட்டு, பையை நாயின் கழுத்தில் கட்டிவிட்டார்.

    நாய் மெதுவாகத் திரும்பி சாலையை நோக்கி செல்ல ஆரம்பித்தது. கடைக்காரருக்கு ஆச்சரியமாக இருந்தது.

    “எங்கேதான் இந்த நாய் போகிறது என்று பார்த்துவிடுவோம்” என்று நினைத்து நாயின் பின்னால் மெதுவாக நடந்து சென்றார். அந்த நாய் ஒரு குறிப்பிட்ட சாலையில் கொஞ்சதூரம் நடந்தது. பின்னர், முக்கிய சாலை வழியாக நடந்து சென்றது. அந்தச்சாலையில் போக்குவரத்து அதிகமாக இருந்ததால், காத்திருந்து சாலையைக் கடந்தது.

    கடைக்காரரும் அந்த நாயை பின்தொடர்ந்து சென்றார். சாலையைக் கடந்தபின்பு அந்த நாய் தனது உரிமையாளரின் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தது.

    கடைக்காரருக்கு ஆச்சரியம் அதிகமானது.

    “மனிதர்கள்கூட இப்படி சரியாக சாலையைக் கடக்க மாட்டார்கள். ஆனால், இந்த நாய் அதிக புத்திக்கூர்மையுடன் செயல்படுகிறதே” என்று நினைத்துக்கொண்டு நாயின் பின்னால் நடந்தார்.

    இப்போது அந்த நாய் தனது உரிமையாளரின் வீட்டை நெருங்கி வந்தது. பின்னர், வீட்டின் வெளிப்புற கதவைத் தட்டியது. நாயின் உரிமையாளர் கோபத்தோடு கதவைத் திறந்தார். நாயின் கழுத்தில் தொங்கிய பையை கழற்றினார். பின்னர், பையில் இருந்த பொருட்களை சரிபார்த்தார். மீதி பணத்தை எடுத்துக்கொண்டார்.

    இந்த இதழை மேலும்

    சின்னஞ்சிறு சிந்தனைகள்

    நாம் நினைப்பதும் செயல்படுவதும் ஏதோ ஒரு வகையில், நம் வாழ்க்கையில் நம்மோடு  இணைந்து பயணிப்பவர்களின் வாழ்வில் உணர்வில் நிச்சயம் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தும்.

    நதியில் விட்டெறியும் கல் போலத்தான் நம் செயல்களும், சொற்களும் விழுந்த இடத்தில் மட்டுமல்லாமல், அதைச்சுற்றியும் அதிர்வுகளை ஏற்படுத்த வல்லது.

    எந்தச் சூழலிலும் சிரித்துப் பழகும் அணுகுமுறை, அன்பை வெளிப்படுத்தும் உடல் மொழி என எல்லாமும் நல்ல அதிர்வுகளை உங்கள் உறவுகள், நீங்கள் வாழும் சுற்றுப்புறம். உங்கள் சமூகம் ஏன் இறுதியில் இந்த உலகம் முழுமையிலும் கொண்டு சேர்க்கும் இது நிச்சயம்.

    பாதை வகுத்தப் பின்பு பயந்தென்ன இலாபம் – அதில் பயணம் நடத்திவிடு மறைந்திருக்கும் பாவம்.

    வாழ்வின் சவாலான சூழ்நிலைகளில் கூட மனிதமனம் ஓர் ஆழமான நம்பிக்கையை இறுகப் பற்றிக் கொண்டு தனக்கு நல்லது நடக்கும் என்று நம்புகிறது. தானே வருவது உணர்வு. நம்மால் வருவது உணர்ச்சி.

    எண்ணங்களை தயாரித்து இயக்குபவர் நாமில்லை பலர் சேர்ந்து உருவாக்கிய ஒன்று தான் அது இதனைப் புரிந்து கொள்ளுபதே எண்ணங்களைப் கையாளும் ஒரே வழி.

    சிந்தனை என்பது நம் சுய கவனத்தில் செய்வது. எண்ணங்களைப் போல தானாக உருவாவது இல்லை.  நம் பொதுவாக நமக்குத் தேவையானவற்றைத் தான் சிந்திக்கிறோம். அதே நேரத்தில். தானாகத் தோன்றி வெளிப்படும் எண்ணங்களைப் பின்பற்றியும் சிந்திக்கிறோம்.

    சிந்திக்கும் விஷயத்தை நாம் தான் முடிவு செய்கிறோம் இங்கு கோபப்படலாமா வேண்டாமா என்பதெல்லாம் நம்முடைய முடிவு தான். ஒரே ஒரு நிமிடப் புரிதல் நாம் வாழ்வின் சகல அம்சங்களையும் அடியோடு மாற்றிவிடும்.

    பழக்கத்திற்கு பழக்கம் தான் தீர்வு. முள்ளை முள்ளால் எடுப்பது போல், புதிய பழக்கத்தை ஏற்படுத்தி பழைய பழக்கத்தை எடுத்து விடுதல். இயற்கைத் தன்மையிலிருந்து உங்கள் வாழ்க்கை முறை எவ்வளவு மாறியிருக்கிறது என்பதையும் புரிந்து கொண்டு அதை ஒழுங்குப் படுத்துங்கள்.

    இந்த இதழை மேலும்

    வளர்பிறை கபாடிக் குழு…

    வளர்பிறை விளையாட்டுக் குழுவானது 1989 ஆம் ஆண்டு ஜீலை மாதம் 12 ம் தேதி தொடங்கப்பட்டு இன்று வரை 30 ஆண்டுகளாக சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இந்தக் குழுவில் விளையாடிய வீரர்கள் நிறைய பேர் ராணுவத்திலும், காவல் துறையிலும் பணியாற்றி வருகிறார்கள் என்பது இக்குழுவிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்றாக இருக்கிறது.

    இக் குழு ஆரம்பத்தில் ஆண்களுக்கான அணிகளாகவே இக்களம் இருந்தது.  ஆண் பெண் பாகுபாடு இல்லாத களம் என்பதால் பெண்களும் இக்களத்தில் சாதிக்க வேண்டும் உரிய நோக்கோடு 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பெண்களுக்கான அணி உருவாக்கப்பட்டது. தொடங்கிய சில நாட்களிலேயே பெண்களின் வருகை நன்றாக இருந்ததால் தற்போது இரண்டு அணிகள் இருக்கிறது. சென்ற இடமெல்லாம் சிறப்பு சேர்க்கும் அணியாகவும் விளங்குகிறது.

    இந்த வளர்பிறை கபாடிக் குழுவானது வளரும் நிலையில் இருக்கின்ற குழுக்களில் ஒன்றாகக் காணப்படுகிறது. அவர்களது இலக்கு என்னவென்றால் எவ்வளவு துரிதமாக வெற்றியின் உச்சத்தை அடைய முடியுமோ அவ்வளவு துரிதமாக அடைய வேண்டும் என்பதே தான்.

    வளர் பிறை அறக்கட்டளையின் சார்பாக தான் இந்தக் குழு நடத்தப்பட்டு வருகிறது. குழுவிற்கென்று தனியாக நிதிகள் எதுவும் திரட்டப்படுவதில்லை. அறக்கட்டளைச் சார்ந்த நண்பர்கள் அனைவரும் சேர்ந்து தான் குழுவை மிகச்சிறப்பாக நடத்தி வருகிறார்கள்.

    அவர்களில் குறிப்பிட்டத்தக்கவர்கள் என்று சொல்ல வேண்டுமென்றால் P.செந்தில் குமார் அவர்கள். இவர் உயிர் மலர் அறக்கட்டளையின் நிறுவனர். இவரைக் குழுவினைச் சார்ந்த அனைவரும் வளர்பிறை கபாடிக் குழுவின் தந்தை என்றே அழைக்கிறார்கள். அந்த அளவிற்கு இவரின் அணுகுமுறையும் மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மையும் ஒரு சிறந்த உதாரணமாக இருக்கிறார். அது மட்டுமின்றி கபாடி அணிகளுக்கு நல்லதொரு பயிற்சியாளரும் இருந்து வருகிறார். அடுத்து டாக்டர் ஈஸ்வரன், ஆனந்த கல்பா ஃபவுண்டேசன், திரு.காட்வின் அவர்கள் கட்டுமானத் தொழில் இவர்கள் இந்தக் குழுவிற்கு தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வருகிறார்கள். திரு. சிவக்குமார் பாரதிய பண்பாட்டு விளையாட்டுக் கழகத்தின் நிறுவனர் மற்றும் திரு. கணேசன் (முன்னாள் கவுன்சிலர்), ஜான் ஹென்றி அவர்களும் இக்குழுவிற்கு தேவையான உதவிகளை அளித்து வருகிறார்கள்.

    இக்குழு முக்கியமாகக் கபாடியைத் தேர்ந்தெடுத்து விளையாடுவதற்கு காரணம் பாரம்பரிய நம் விளையாட்டு சீர்குலைந்து விடாமல் முன்னேற்றம் அடையச் செய்வதற்காக என்பதனை மிகவும் உணர்ச்சியின் வெளிப்படுத்தினார் குழுவின் பயிற்றுவிப்பாளர் சதீஷ்குமார் அவர்கள். இவர்கள் சிறிய வயதில் கபாடி கற்றுக் கொள்ளும் போது ஒரு சரியான விளையாட்டுத் திடல் கூட இருந்தது இல்லையாம். சாலையோரங்களில் விளையாடித்தான் முன்னேற்றம் அடைந்துள்ளனர். என்பதையும் அவர் தெரிவித்தார். முதலில் கால்பந்து வீரர்களாக இருந்த இவர்களை கபாடியில் விருப்பத்தை ஏற்படுத்தி முன்னேற செய்தவர் செந்தில் குமார் அவர்கள் என்று மகிழ்ச்சிவுடன் தெரிவித்துக் கொண்டார்.

    குழுவின் சார்பாக விளையாடிய வீரர்கள் பலர் மாநில அளவில் வெற்றி பெற்றுள்ளனர். ஆறு முறை தொடர்ந்து பெரிய அளவில் போட்டிகளை நடத்தியுள்ளது இந்தக் குழு.

    குழுவில் உள்ள வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அனைவரும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயில்பவர்களாக இருக்கிறார்கள்.  14 வயதில் இருந்து விளையாடக்கூடிய வீரர்களும் இக்குழுவில் உள்ளனர். ஒரு நாளைக்கு இரண்டு மணிநேரங்கள் பயிற்சியளிக் கப்படுகின்றது.

    இந்த இதழை மேலும்