Dr.N. நாகரத்னம் M.B.B.S.,M.D.,(O.G).,FRM.,DRM(GERMANY)
இயக்குநர், ரத்னா மருத்துவமனை
(பெண்கள் மகப்பேறு மற்றும்
குழந்தையின்மைக்கான சிறப்பு மருத்துவமனை)
செக்காலை, காரைக்குடி.
இலட்சியங்கள் கனவுகள் மலரட்டும், அவை
செய்யும் பணியில் மணக்கட்டும்
புதிய முயற்சிகள் தொடரட்டும், அவை
புத்துணர்வாய் நெஞ்சில் துளிர்க்கட்டும்
என்னும் தன்னம்பிக்கை வரிகளை தன்னகத்தே கொண்டு தான் கொண்ட மருத்துவத்துறையில் சாதித்து வரும் சாதனைப் பெண்மணி.
தான் பிறந்த மண்ணிற்குப் பெருமை சேர்க்கும் விதமாக கற்ற மருத்துவத்தை சொந்த ஊரிலே செய்ய வேண்டும் என்று தன்னால் முடிந்த மருத்துவ சேவையை செய்து வருபவர்.
குழந்தையில்லா தம்பதியினர் யாரும் இருந்திட கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, பல மருத்துவ புதுமைகளைப் புகுத்தி வரும் மருத்துவர்.
மருத்துவமனை தொடங்கி குறுகிய ஆண்டுகளே ஆனாலும் தான் தொடும் அனைத்தையும் சாதனைகளாகவே முடிக்கும் குணம் கொண்ட ரத்னா மருத்துவமனையின் இயக்குநர் திருமதி. Dr. N. நாகரத்னம் அவர்களின் நேர்முகம் இனி நம்மோடு.
கே: உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?
செட்டிநாட்டுப் புகழ் என்று அழைக்கப்படும் காரைக்குடியில் தான் பிறந்தேன். என்னுடைய தந்தை டாக்டர் நாகப்பன், தாயார் திருமதி. தெய்வானை. எனக்கு ஒரு சகோதரி. எனக்கு சிறு வயதிலிருந்தே மருத்துவராக வேண்டும் என்பது தான். அது தான் என்னுடைய ஆசையும் கனவாகவும் இருந்தது. அதற்கு காரணம் என்னுடைய தந்தை தான். என் தந்தை ஒரு கண் மருத்துவர். எங்கள் பகுதியில் மிகவும் பிரபலமானவர். அனைவரிடத்திலும் அன்பாகப் பழகும் குணம் கொண்டவர். தன்னிடம் வருபவர்களை ஒரு நோயாளியாய் பார்க்க மாட்டார், ஒரு உறவினர் போல் அனுசரணையோடு பழகுவார். இதையெல்லாம் சிறு வயதிலிருந்து பார்த்து வளர்ந்ததால் நாமும் ஒரு மருத்துவராக வேண்டும் என்று நினைத்தேன். என்னுடைய பள்ளிக் கல்வி என்று பார்த்தால் மதுரையில் உள்ள மகாத்மா மெட்ரிக் பள்ளி. தொடக்கக் கல்வியிலிருந்து பத்தாம் வகுப்பு வரை படித்தேன். பத்தாம் வகுப்பு முடித்தவுடன் காரைக்குடியிலுள்ள முத்தையா அழகப்பா பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பை முடித்தேன்.
எம்.பி.பி.எஸ் படிப்பை கோவையில் புகழ்பெற்ற மருத்துவக் கல்லூரியான பி.எஸ்.ஜி மெடிக்கல் கல்லூரியிலும், M.D(O.G) யை சிதம்பரத்திலுள்ள ராஜா முத்தையா ஆய்வு மையத்திலும் படித்தேன்.
கே: மகப்பேறு மருத்துவராக வர வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்குள் எப்படி வந்தது?
திருமணம் ஆன எல்லா தம்பதியனர்களும் நினைப்பது நமக்கு ஒரு குழந்தை வேண்டும் என்பது தான். அவ்வாறு குழந்தையில்லாத போது அது குடும்பம் மற்றும் சமுதாய பிரச்சனையாகிவிடுகிறது. ஒரு பெண் எப்போது முழுமை அடைகிறார் என்றால் அது அவரின் தாய்மையின் போது தான். தாய்மை உணர்வைத் தாண்டி இவ்வுலகில் பரிசுத்தமான உறவு எதுவும் இல்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு தாய்மைக்கு பெருமை உண்டு.
ஒவ்வொரு முறையும் குழந்தைப்பிறக்கும் பொழுதும் அந்த பெண் மறுஜென்மம் அடைகிறார். தாய் மற்றும் குழந்தைக்கு நடுவே நாமும் ஒரு பகுதியாக இருக்கிறோம் என்பதை எண்ணும் போது மனதிற்கு மிகவும் மகிழச்சியாக இருக்கும். அந்தக்குடும்பம் மற்றும் அந்தக் குழந்தை காலம் முழுவதும் சொல்லிக் கொள்ளும் இந்த மருத்துவமனையில் தான் பிறந்தேன் என்று இந்த மருத்துவர் தான் நம் பிறக்கும் போது உடன் இருந்தார்கள் என்று சொல்லிக் கொள்ளும். இது போன்ற இன்னும் எத்தனையோ சிறப்புகள் மகப்பேறு மருத்துவத்தில் இருக்கிறது.
கே: ரத்னா மருத்துவமனை உதயமானது பற்றிச் சொல்லுங்கள்?
நான் படித்த முடித்து சில ஆண்டுகள் மருத்துவப் பயிற்சி மேற்கொண்டிருந்தேன். அப்போது என்னைப் பார்க்க வரும் நிறைய பெண்களின் ஏமாற்றமான எதிர்பார்ப்பு திருமணம் ஆகி இத்தனை ஆண்டுகள் ஆகிறது எங்களுக்கு குழந்தையில்லை என்பது தான். அப்போது தான் என் மனதில் உதயமாயின, நாம் ஏன் முழுவதுமாக ஒரு மகப்பேறு சம்மந்தமான மருத்துவம் கொடுக்ககூடாது என்று. இதனால் இதை மென்மேலும் தெரிந்து கொள்ள நினைத்தேன். இதனால் இந்திய முழுவதும் இத்துறை சார்ந்த தேடுதலை தீவிர படுத்தினேன். பல பயிற்சி முகாம்களில் கலந்து கொண்டேன்.
கேரளாவில் Fellowship in Reproduction என்னும் துறையை ஒரு ஆண்டு படித்தேன். மேலும் ஜெர்மனியில் கீல் யுனிவர்சிட்டியில் Diploma in Reproductive medicine முடித்தேன். இங்கெல்லாம் படித்த அனுபவம் என்னை மிகவும் வலிமைபடுத்தியது. எதுவும் சாதாரணமாக தொடங்குவதில் எனக்கு ஒரு போதும் உடன்பாடு இருக்காது. ஒன்றை தொடங்குகிறோம் என்றால் அது சார்ந்த அத்துனை தேவைகளையும் நம்மால் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்பதால் அனைத்து உபகரணங்களுடன் தொடங்கியது தான் இந்த ரத்னா மருத்துவனை.
கே: குழந்தையில்லா தம்பதியினருக்கு டெஸ்ட்டியூப் பேபி முறை இறுதி தீர்வா?
தற்போது சூழலில் மக்களின் மனநிலை எப்படி மாறியுள்ளது என்றால், திருமணம் முடிந்து ஒரு ஆண்டுகள் ஆனவுடன் குழந்தையில்லை என்றால் அது டெஸ்ட்டியூப் பேபி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று தவறான புரிதல்கள் இருக்கிறது.
திருமணம் ஆகி ஒரே ஆண்டில் குழந்தைப் பிறந்தவர்கள் இருக்கிறார்கள். இரண்டு மூன்று ஆண்டுகளும் ஆகலாம். சிலருக்கு இரண்டு மூன்று ஆண்டுகள் குழந்தை இல்லை என்றதும் எங்களை அணுகுவார்கள். அவர்களை சோதித்து பார்த்து அவர்களின் உடலின் சாதாரண பிரச்சனைகள் தான் இருக்கும், மருந்து மாத்திரை மூலமே சரி செய்து விடலாம். மேலும் சிலர் விழிப்புணர்வு இன்றி இருப்பார்கள், அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுப்பதன் மூலமே அவர்கள் கருத்தரித்திருக்கிறார்கள். இப்படி நிறைய தம்பதியினர்கள் நம் மருத்துவமனையில் கருவுற்று இருக்கின்றனர். டெஸ்ட்டியூப் பேபி சிகிச்சை அனைவருக்கும் பொதுவான தீர்வல்ல.
கே: நம் முன்னோர்களின் காலத்தில் இயற்கையாகவே கருதரித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது, ஆனால் தற்போது அந்த நிலை மாறியுள்ளதே அது பற்றி சொல்லுங்கள்?
உலகம் முழுவதும் இந்த நிலை மாறியுள்ளதாக சில ஆய்வுத்தகவல்கள் நம்மை எச்சரிக்கிறது. இதற்கு முக்கிய காரணங்கள் காலம் தாழ்த்தி திருமணம் செய்வது உணவுப் பழக்கங்கள், வேலைபளு ஆகியவை.
நம் முன்னோர்கள் சரியான வயதில் திருமணம் செய்தார்கள், சரியான வயதில் குழந்தைகள் பெற்றெடுத்தார்கள். சில குடும்பத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருப்பதைக் கூட பார்த்திருக்கிறோம். அப்போது தேவைகள் குறைவாக இருந்தது, குறுகிய வருமானம் இருந்தாலே குடும்பத்தை நடத்திக் கொள்ள முடியும் என்ற நிலை இருந்தது.
ஆனால் தற்போது அப்படியில்லை. பட்டங்கள், பணிகள்,சேமிப்புகள் என தங்கள் தேவைகளை பூர்த்தி செய்த பின்னர் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்குள் அவர்களுக்கு வயது ஆகிவிடுகிறது. திருமணம் ஆனப்பின்னரும் அவர்கள் உடனே குழந்தைப் பெற்றுக் கொள்வதில்லை, அதற்கும் வருடங்களைத் தள்ளிப் போடுகிறார்கள்.
ஆண், பெண் இருவரும் வேலைக்கு போகிறார்கள், அவர்கள் வீட்டிற்கு வருவதற்கு கால தாமதம் ஆகிவிடும், வீட்டில் சமைப்பதில்லை, இதனால் கடையிலிருந்து துரித உணவுகள் வாங்கி வந்து உண்கிறார்கள். இதனால் ஆண், பெண் இருவருக்கும் உடல் பருமன் ஏற்படுகிறது, பெண்களுக்கு சரியான மாதவிடாய் ஏற்படுவதில்லை. வேலை செய்யும் இடத்தில் மனஅழுத்தம் போன்றவை குழந்தையின்மைக்கு பெரும் காரணமாக இருக்கிறது.
கே: டெஸ்ட்டியூப் பேபி செய்யப்படுவதற்கான காரணம்?
டெஸ்ட்டியூப் பேபி முறைக்கு போக வேண்டும் என்றால் அதற்கான காரணங்களை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். ஆண்களுக்கு அணுக்கள் மிக குறைவாக அல்லது விந்தணு வெளிப்படாமல் போனால்.
பெண்களுக்கு கருமுட்டை உருவாகாமல் இருந்தால். வயது கூடும் போது பெண்களுக்கு கருமுட்டையின் தன்மை குறைய தொடங்கும். அப்போது முட்டை தானம் பெற்று டெஸ்ட்டியூப் பேபி செய்யப்படும்.
கருக் குழாயில் அடைப்பு இருத்தல் போன்ற காரணங்களால் டெஸ்ட்டியூப் பேபி செய்யப்படுகிறது.
கே: திருமணம் ஆன எல்லோராலும் தாய்மை நிலை அடைய முடியுமா?
இது தான் எங்களின் தளராத முயற்சி. எல்லோரும் தாய்மை நிலையை அடைய வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கமும் குறிக்கோளும். அதனால் எங்கள் மருத்துவமனையில் இத்துறை சார்ந்த அதிநவீன இயந்திரங்கள், மருத்துவ உபகரணங்கள் எல்லாம் வைத்திருக்கிறோம்.
எல்லோருக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை கொடுப்பதில்லை. ஒவ்வொரு தம்பதியனரும் பல விதமான பிரச்சனைகளில் வருவார்கள், அவர்களின் பிரச்சனையை அறிந்து அவர்களுக்கு ஏற்றார் போல் அதை சரி செய்ய வேண்டும்.
கர்ப்பப்பையில் இரத்த கசிவு ஏற்படும், இவ்வாறு இருப்பவர்கள் கர்ப்பம் தரிப்பது மிகவும் கடினம், அவ்வாறு தரித்தாலும் கரு கலையும் சூழல் எற்பட்டுவிடும். அப்படிப்பட்டவர்கள் வரும் போதுகூட அவர்களின் உடலை அறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளித்து குழந்தைப்பேற்றை உருவாக்கிக் கொடுத்திருக்கிறோம்.
இந்த இதழை மேலும்